தமிழ்நாடு
ஸ்டாலின் பதவியேற்றதற்கு ஆந்திர ‘மூதாதையர் கிராமத்தில்’ கொண்டாட்டமா..?- என்ன நடந்தது; உண்மை என்ன??

தமிழக முதல்வராக கடந்த மே 7 ஆம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். இதன் மூலம் 10 ஆண்டுகளுக்குப் பின்னர் திமுக மீண்டும் தமிழகத்தில் ஆட்சியமைத்து உள்ளது. இதற்குப் பல்வேறு தரப்பினரும் திமுகவுக்கும் ஸ்டாலினுக்கும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் பிரபல நாளிதழான ‘இந்து தமிழ்’-ல், ‘ஸ்டாலின் பதவியேற்றதற்கு ஆந்திர மூதாதையர் கிராமத்தில் கொண்டாட்டம்’ என ஒரு செய்தி பிரசுரமாகியுள்ளது. இது மிகப் பெரிய சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது.
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி, தமிழகத்தைச் சேர்ந்தவர் இல்லையென்றும், அவர் ஒரு தெலுங்கர் என்றும் நாம் தமிழர் கட்சி மற்றும் இந்துத்துவ அமைப்புகள் தொடர்ந்து சொல்லி வருகின்றார்கள். இதற்கு எவ்வித ஆதாரமும் இல்லையென்று திமுக தரப்பு மறுத்து வருகிறது.
எந்தவித ஆதாரம், எவ்வித உறுதிப்பூர்வமும் இல்லாமல் நாம் தமிழர் வாட்சப் குழுபோல் இயங்குவது தான் தமிழ் இந்து நாளிதழிக்கு இலக்கணமா?
1/n pic.twitter.com/dRfexr9z6s
— UmaMaheshwaran Panneerselvam (@Inferno1510) May 10, 2021
இப்படியான சூழலில் ஆந்திராவில் உள்ள “சொருவு கொம்மாபாளையம்” கிராமத்தில் மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றதற்கு கொண்டாட்டங்கள் நடந்துள்ளதாக செய்தி வெளி வந்துள்ளது. குறிப்பாக அந்த செய்தியில், ‘கடந்த 1960 ஆம் ஆண்டு கருணாநிதி ஆந்திராவின் ஏலூருக்கு வந்தார். அப்போது அவர் தமது மூதாதையர் வாழ்ந்த ஊரான செருவு கொம்மாபாளையம் குறித்தும் அங்குள்ள வம்சாவளியினர் குறித்தும், இப்போது வசித்து வருபவர்கள் குறித்தும் ஆர்வத்தோடு கேட்டறிந்தார் என ஜலந்தர் பாலகிருஷ்ணா எனும் நாவலாசிரியர் கூறுவதுண்டு’ என்ற சர்ச்சைக்குரிய தகவலும் பகிரப்பட்டு உள்ளது.
இந்த தகவலுக்கு என்ன ஆதாரம் மற்றும் இந்த மொத்த செய்தியிலும் குறிப்பிடப்பட்டுள்ள விபரங்களுக்குப் போதிய ஆதாரம் உள்ளதா என்று பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். குறிப்பாக திமுக, அரசு ‘இந்து தமிழ்’ மீது அவதூறு வழக்குப் பதிவு செய்யப்பட வேண்டும் என்றும் குரல்கள் எழுந்துள்ளன.
















