இந்தியா
ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி.. குறைந்த ரீசார்ஜ் இனி ரூ.300?

ஏர்டெல் நிறுவனம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் குறைந்த ரீசார்ஜ் தொகையான ரூ.99 என்பதை நீக்கி ரூ.149 என்று உயர்த்திய நிலையில் தற்போது அனைத்து வகை பிளான்களிலும் விலையை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி வெளியாகியுள்ளது ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தொலைத்தொடர்பு துறையின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான ஏர்டெல் நிறுவனம் ஏராளமான வாடிக்கையாளர்களை இந்தியாவில் வைத்துள்ளது என்பதும் இந்நிறுவனம் சமீபத்தில் 5ஜி ஏலம் எடுத்து உள்ளதை அடுத்து 5ஜி சேவையும் செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அதிகரித்து வரும் போட்டி மற்றும் 5ஜி ஏலத்திற்காக செலவு செய்த முதலீடு தொகையை ஆகியவற்றின் காரணமாக தற்போது பிளான்களில் உள்ள அனைத்து திட்டங்களையும் மாற்றம் செய்ய ஏர்டெல் நிறுவனம் முடிவு செய்துள்ளது. ஏற்கனவே குறைந்தபட்ச ரீசார்ஜ் பிளான் ரூபாய் 99 என்பதை மாற்றி ரூ.149 என உயர்த்திய நிலையில் தற்போது குறைந்த பட்சம் ரீசார்ஜ் ரூபாய் 200 அல்லது 300 இருக்கலாம் என்று ஏர்டெல் வட்டாரங்களில் இருந்து செய்திகள் வெளியாகி உள்ளன.
குறைந்தபட்ச ரீசார்ஜ் 300 என்பது எங்கள் இலக்காக இருந்தாலும் இப்போதைக்கு ரூபாய் 200 என அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக ஏர்டெல் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நிறுவனத்தின் இருப்பு நிலை ஆரோக்கியமாக இருந்தாலும் கட்டண உயர்வு அவசியம் என்று பதிலளித்த ஏர்டெல் நிறுவனத்தின் நிர்வாகி ஒருவர் அதிக மூலதனம் செய்திருந்தாலும் அதிலிருந்து வருமானம் குறைவாகவே இருப்பதால் இந்த கட்டண உயர்வு தவிர்க்க முடியாது என்று தெரிவித்துள்ளார். இந்த கட்டண உயர்வு இன்னும் ஒரு சில நாட்களில் அறிவிக்கப்படும் என்றும் ஆனால் அதே நேரத்தில் சேவை தரமாக இருக்கும் என்றும் ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் தற்போது சம்பளங்கள் உயர்ந்துவிட்டன, வாடகை ஏறிவிட்டது, அதனால் இந்த கட்டண உயர்வை பெரிதாக யாரும் குறை சொல்ல மாட்டார்கள் என்று நாங்கள் நம்புகிறோம் என்றும் மக்கள் கிட்டதட்ட எதுவுமே செலுத்தாமல் 30 ஜிபி பயன்படுத்திருக்கிறார்கள் என்றும் எனவே இந்த கட்டண உயர்வு தவிர்க்க முடியாது என்றும் ஏர்டெல் அதிகாரி கூறியுள்ளார்.
இந்த நிலையில் ஏர்டெல் நிறுவனத்தின் குறைந்தபட்ட ரீசார்ஜ் பிளான் ரூபாய் 200 என்று மாறுவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாகவும் அதுமட்டுமின்றி இன்னும் ஒரு சில மாதங்களில் ரூபாய் 300 என அதை உயர்த்தவும் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் தற்போது ஏர்டெல் நிறுவனத்தில் சுமார் 100 மில்லியன் 2ஜி வாடிக்கையாளர்கள் இருப்பதால் அவர்கள் அனைவரையும் 4ஜி மற்றும் 5ஜிக்கு மாற்ற திட்டமிட்டுள்ளதாகவும் அனைத்து வாடிக்கையாளர்களும் 5ஜிக்கு மாற்றிய பின்னரே 5ஜிக்கு என தனியாக பிளான் தயாரிக்கப்படும் என்றும் ஏர்டெல் நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
2ஜி வாடிக்கையாளர்களை தவிர்க்க முடியாது என்றும் அவர்களாகவே 2ஜியில் இருந்து 5ஜிக்கு மாறும்வரை ஏர்டெல் நிறுவனம் பொறுமை காக்கும் என்றும் 4ஜி அல்லது 5ஜிக்கு மாறுவதற்கு வாடிக்கையாளர்கள் நிர்பந்தம் செய்யப்பட மாட்டார்கள் என்றும் ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.