சினிமா செய்திகள்
‘மாஸ்டர்’ பட வெற்றிக்காக கோயில் தரிசனம் செய்த அனிருத், லோகேஷ் கனகராஜ்

தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘மாஸ்டர்’ திரைப்படம் வரும் 13 ஆம் தேதி, உலகம் முழுவதும் வெளியாகிறது. பொங்கல் பண்டிகையையொட்டி, மாஸ்டர் ரிலீஸ் செய்யப்படுகிறது.
மாஸ்டர் படத்துக்காக விஜய் ரசிகர்கள் சுமார் ஓராண்டாக காத்திருக்கிறார்கள். கடந்த ஏப்ரல் மாதமே படத்திற்கான அனைத்துப் பணிகளும் முடிந்துவிட்டன. ஆனால், கொரோனா தொற்று காரணமாக மாஸ்டரை வெளியிட முடியாமல் தவித்து வந்தது படக்குழு. இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம், ‘பொங்கலுக்கு மாஸ்டர் கன்ஃபார்ம்’ என்று கூறியது படக்குழு. அதற்கு ஏதுவாக திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளை நிரப்பிக் கொள்ள தமிழக அரசு அனுமதியளித்தது.

ஆனால் மத்திய அரசு, இந்த அனுமதிக்கு மறுப்பு தெரிவிக்கவே, 100 சதவீத இருக்கை நிரப்பிக் கொள்ளும் அறிவிப்பு திரும்பப் பெறப்பட்டது. எப்படியானாலும், குறித்த தேதிக்கு மாஸ்டரை வெளியிடுவதில் படக்குழு உறுதியாக உள்ளது. இன்னும் 3 நாட்களில் மாஸ்டரை திரையரங்குகளில் தரிசிக்கலாம். இப்படியான சூழலில் படம் வெற்றி பெற வேண்டும் என்னும் நோக்கில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், இசையமைப்பாளர் அனிருத் மற்றும் படக்குழுவினர், திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்துள்ளனர்.


















