தமிழ்நாடு
மேகதாது விவகாரம்: தமிழக அரசு எடுத்த அதிரடி முடிவு!

தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு இடையே மேகதாது அணை விவகாரம் கடந்த சில மாதங்களாக உச்சகட்டமாக இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக தமிழக முதல்வராக முக ஸ்டாலின் அவர்கள் பதவியேற்றதும், அதேபோல் கர்நாடக மாநிலத்தில் பசவராஜ் பொம்மை பதவியேற்றதும் இந்த விவகாரம் சூடு பிடிக்கத் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
கர்நாடக மாநிலத்தில் மேகதாது அணையை கட்டியே தீருவோம் என கர்நாடக முதல்வர் பொம்மை பசவராஜ் பிடிவாதமாக உள்ளார். ஆனால் அதே நேரத்தில் தமிழகம் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மேகதாது அணை கட்டக்கூடாது என பிரதமர் மோடியை முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் நேரில் சந்தித்து வலியுறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் மேகதாது அணை கட்டப்படுகிறதா? என்பதை ஆய்வு செய்ய குழு ஒன்று அமைக்கப்பட்டதை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்து உள்ள நிலையில் தற்போது தேசிய பசுமை தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பு ஒன்றை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய தமிழக அரசு அதிரடியாக முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து தமிழக நீர்வளத்துறை கூறியபோது காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட முயற்சிகள் எடுத்து வருவதை அடுத்து மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியது. கர்நாடகாவில் கட்ட உத்தேசித்துள்ள மேகதாது அணையை குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க கூடாது என கர்நாடக அரசை வலியுறுத்தும் படி அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தேசிய பசுமை தீர்ப்பாயம் மேகதாது அணை குறித்து வழங்கிய தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. உரிமையியல் முறையீட்டு மனுவை விரைவில் சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு தாக்கல் செய்ய திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

















