தமிழ்நாடு
கூட்டுறவு நகைக்கடன்கள் தள்ளுபடி எப்போது? வெளியான சூப்பர் தகவல்!

தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் இன்று காகிதமில்லா இ-பட்ஜெட்டை தாக்கல் செய்தார் என்பதும் அந்த பட்ஜெட்டில் பல்வேறு அதிரடி அறிவிப்புகள் வெளியானது என்பதும் தெரிந்ததே. குறிப்பாக அரசு பணியில் இருக்கும் மகளிர்களுக்கு பேறுகால விடுமுறை 12 மாதங்களாக அதிகரிப்பு, குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூபாய் 1000 குறித்த அறிவிப்பு, பெட்ரோலுக்கான வரி ரூ.3 குறைப்பு என அறிவிப்பு என பொது மக்களை கவர்ந்தது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்
இந்த நிலையில் பொதுமக்கள் மிகவும் எதிர்பார்க்கும் ஒரு முக்கிய அறிவிப்பு கூட்டுறவு வங்கிகளில் உள்ள நகை கடன் தள்ளுபடி எப்போது என்பதுதான். இந்த குறித்து இந்த பட்ஜெட்டில் கூறியபோது, ‘கூட்டுறவு கடன் சங்கங்களில் வழங்கப்பட்ட நகைக்கடன்கள் மற்றும் சுய உதவிக்குழுக்களுக்கான கடன்களை தள்ளுபடி செய்வதை அரசு முன்னுரிமையாக கொண்டுள்ளது.
முந்தைய அரசு தேர்தலுக்கு முன்பாக பயிர்க்கடனை தள்ளுபடி செய்வதாக அறிவித்ததால், 12,110.74 கோடி தற்போதைய அரசு மீது நிதிச்சுமையாக அமைந்துவிட்டது. இதற்காக தற்போது, 4,803.95 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுபோல இதர நகைக் கடன்களை தள்ளுபடி செய்யும்போதும், இதே நிலைமை ஏற்படும். அதனால் உரிய ஆய்வுக்கு பின்பு தள்ளுபடி குறித்து முடிவு எடுக்கப்படும். அப்போது தான், தவறுசெய்பவர்கள் தவிர்க்கப்பட்டு உண்மையான பயனாளிகள் பலனடைவார்கள்’ என்று கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகை கடன் பெற்றுள்ள பயனாளிகளின் விவரங்களை வரும் 16-ஆம் தேதிக்குள் பதிவாளர் அலுவலகத்திற்கு அளிக்க கூட்டுறவு சங்க அதிகாரிகளுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது
இதனையடுத்து கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை நகை கடன் பெற்றவர்களின் கடன்கள் தள்ளுபடி என்று அறிவிப்பு எந்த நேரத்திலும் வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடன் பெற்றவர்களின் கேஒய்சி ஆவணங்கள், குடும்ப அட்டை விவரங்களை கூட்டுறவு சங்கங்கள் தயார் நிலையில் வைத்திருக்க உத்தரவு பிறப்பித்துள்ளதால் கூட்டுறவு நகை கடன் தள்ளுபடி குறித்த விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

















