இந்தியா
மத்திய நீர்வளத்துறை அமைச்சருடன் கர்நாடக முதல்வர் சந்திப்பு: மேகதாது அணைக்கு அனுமதி கிடைக்குமா?

தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு இடையே மேகதாது பிரச்சனை உச்சகட்டமாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் கர்நாடக முதலமைச்சர் மற்றும் கர்நாடக உள்துறை அமைச்சர் ஆகிய இருவரும் மத்திய நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இன்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திரசிங் செகாவத், கர்நாடக மாநிலத்திற்கு வருகை தந்துள்ளார். அவரை கர்நாடக முதல்வர் எடியூரப்பா மற்றும் கர்நாடக உள்துறை அமைச்சர் பசுவராஜ் ஆகிய இருவரும் சந்தித்து பேசியுள்ளனர். இந்த சந்திப்பின்போது மேகதாது அணைக்கு மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை மனுவை கர்நாடக அரசு சார்பில் மத்திய அமைச்சரிடம் கொடுக்கப்பட்டதாகவும் அது குறித்து பரிசீலனை செய்வதாக மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் கூறியதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
மேகதாதுவில் அணை கட்டக்கூடாது என தமிழகம் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது என்பதும், அனைத்து கட்சி கூட்டத்தில் இது குறித்து தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மத்திய நீர்வளத் துறை அமைச்சரை சந்தித்து மேகதாது அணை கட்ட அனுமதி வேண்டும் என கர்நாடக மாநில அரசு தரப்பில் இருந்து கோரிக்கை மனு கொடுத்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மத்தியிலும் பாஜக ஆட்சி, கர்நாடக மாநிலத்திலும் பாஜக ஆட்சி செய்து வருவதால் மேகதாது அணைக்கு மத்திய அரசு கர்நாடக மாநிலத்திற்கு அனுமதி அளிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஆனால் அதே நேரத்தில் ஏற்கனவே பாஜக மீது கடுமையாக அதிருப்தியில் இருக்கும் தமிழக மக்கள், கர்நாடக மாநிலம் மேகதாது அணை கட்டுவதற்கு மத்திய அரசு அனுமதி அளித்தால் அந்த அதிருப்தி மேலும் அதிகரிக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.











