இந்தியா
கேரளாவில் பாஜகவை ஒரு இடம் கூட கிடைக்காது; ஓட ஓட விரட்டுவோம்: பினராயி விஜயன் உறுதி

தமிழகத்தைப் போலவே கேரளாவிலும் இன்று சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. கேரளாவில் மொத்தம் இருக்கும் 140 தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடந்து வருகிறது. வரும் மே 2 ஆம் தேதி அனைத்து தொகுதிகளுக்கும் முடிவுகள் அறிவிக்கப்படும். கேரளாவைப் பொறுத்தவரை இந்த முறை ஆளும் இடதுசாரிகள் தரப்புக்கும் காங்கிரஸ் கூட்டணிக்கும் இடையில் தான் கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாஜக ஒன்றிரண்டு இடங்களில் வேண்டுமானால் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இன்று தன் வாக்கைச் செலுத்தவிட்டு பத்திரிகையாளர்களை சந்தித்த கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியதாவது:-
ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான எல்டிஎஃப் கூட்டணி வரலாற்று வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என நம்புகிறேன். இடதுசாரிகளுடன் துணையாக இருக்கும் மக்கள் மீது தீவிரமான நம்பிக்கை இருக்கிறது.
எங்கள் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானது என்பதை மக்கள் உள்ளாட்சித் தேர்தலின்போது மாபெரும் வெற்றியளித்து நிரூபித்துவிட்டார்கள். இது சட்டப்பேரவைத் தேர்தலிலும் எதிரொலிக்கும். மக்கள் இடதுசாரிகளுக்கு அளப்பரிய ஆதரவு அளித்ததை தேர்தல் பிரச்சாரத்தில் காண முடிந்தது.
Performed my duty as a citizen and voted. The people of Kerala have already decided who should govern them, and today they will mark their seal on it. #LDFforSure pic.twitter.com/spK2PfBXYD
— Pinarayi Vijayan (@vijayanpinarayi) April 6, 2021
கேரளாவில் ஏற்பட்ட இயற்கை பேரிடர்கள், வெள்ளம், மழை, தொற்றுநோய் போன்ற காலங்களில் நாங்கள் செய்த உதவிகள், திட்டங்கள், சேவைகளால் மக்கள் நிச்சயம் எங்களுடன் இருப்பார்கள். அனைத்து நேரங்களிலும் எங்களுக்கு ஆதரவாக இருந்த மக்கள் நிச்சயம் நல்லவிதமான தீர்ப்பை வழங்குவார்கள் என நம்புகிறேன்.
பாஜக, நீமம் தொகுதியில் மட்டும் கடந்த தேர்தலில் வென்றது. ஆனால், இந்த முறை பாஜகவுக்கு ஒரு இடம் கூட கிடைக்க விடமாட்டோம். பாஜகவுடன் சில தொகுதிகளில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயகக் கூட்டணி ரகசிய உடன்பாடு ஏதும் செய்திருக்கிறார்களா என்பது எனக்குத் தெரியாது. கடந்த தேர்தலைவிட இந்த முறை நாங்கள் வரலாற்று வெற்றி பெறுவோம். ஐயப்ப பக்தர்களும், அனைத்துக் கடவுள்களும் இடதுசாரிகளுக்கு ஆதரவாக இருப்பார்கள்.
இவ்வாறு பினராயி விஜயன் நம்பிக்கையுடன் கருத்துகளைத் தெரிவித்தார்.
















