சினிமா
தேசிய பங்குச்சந்தையில் வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல்.. முதல் நாளே இவ்வளவு லாபமா?

தமிழ் திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான வேல்ஸ் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் இன்று முதல் தேசிய பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிலையில் முதல் நாளே இந்த நிறுவனத்தின் பங்குகள் லாபத்தில் வர்த்தகமாகியுள்ளது.
தேசிய பங்குச் சந்தையில் வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் பட்டியல் இடப்பட்டதை அடுத்து இதன் தொடக்க விழா சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது. தேசிய பங்குச்சந்தையின் தென் மண்டல வணிக பிரிவின் தலைவர் சிறப்பு விருந்தினராக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். மேலும் இந்த நிகழ்ச்சியில் பல தொழிலாதிவர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டனர் என்பதும் வேல்ஸ் லைன் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தலைவர் ஐசரி கணேஷ் மற்றும் அவரது மகள் ப்ரீத்தா கணேஷ் ஆகியோர்களும் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் ஐசரி கணேஷ் பேசும்போது ’எங்கள் நிறுவனத்தின் பங்கு தேசிய பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிகழ்வில் கலந்து கொண்டதற்கு மகிழ்ச்சி அடைகிறேன். வேல்ஸ் நிறுவனம் தொடக்கத்தில் வேல்ஸ் கல்வி அறக்கட்டளை என்ற பெயரில் தொடங்கப்பட்டது. கடந்த 1992 ஆம் ஆண்டு 39 மாணவர்களுடன் தொடங்கப்பட்ட இந்நிறுவனம் தற்போது 40 ஆயிரம் மாணவர்கள் படிக்கும் கல்வி நிறுவனமாக வளர்ச்சி அடைந்துள்ளது.
திரைத்துறையில் நல்ல அனுபவத்தை பெற்ற நான் தற்போது பொதுமக்களின் அன்பை பெறுவதற்காக பங்குச்சந்தை வணிகத்தில் ஈடுபட்டுள்ளோம். வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் லிமிடெட் என்ற நிறுவனத்தை தேசிய பங்கு சந்தையில் பட்டியலிட கடந்த மூன்று ஆண்டுகளாக முயற்சித்து வந்த நிலையில் தற்போது தான் அந்த கனவு நிறைவேறி உள்ளது. முதல் நாளே பலர் எங்களுடைய நிறுவனத்தின் பங்குகளை வாங்கி உள்ளனர்.
எங்கள் பங்குகளின் தொடக்க விலை 93 ரூபாய் என நிர்ணயித்த நிலையில் இன்றைய வர்த்தக வடிவில் 106 ரூபாய் என வர்த்தகமாகியுள்ளது. தொடர்ந்து எங்கள் நிறுவனத்திற்கு பொதுமக்கள் ஆதரவளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார். மேலும் முதலீட்டாளர்களுக்கு விரைவில் டிவிடெண்ட் எனப்படும் ஊக்கத்தொகையை வழங்குவதற்கும் முயற்சி செய்வேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.