இந்தியா
நாடாளுமன்றத்தில் உப்புமா கதை: பாஜகவை ஒப்பீடு செய்த திருச்சி சிவா!
திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா நாடாளுமன்றத்தில் பாஜகவையும் உப்புமாவையும் ஒப்பிட்டு கூறிய கதை அவையில் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது. காமெடியாக இவர் கூறிய இந்த கதையில் பாஜகவை பங்கமாக கலாய்த்து அடுத்தமுறை பாஜக ஆட்சிக்கு வராது என கூறியுள்ளார்.
திமுக எம்பி திருச்சி சிவா பேசியதாவது, ஒரு கல்லூரி விடுதியில் எப்போதும் உப்புமா பரிமாறப்பட்டு வந்தது. இதனால் கோபமடைந்த மாணவர்கள், உப்புமா வேண்டாம் என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து வேறு வழி இல்லாமல் வாக்கெடுப்பு நடத்த விடுதி காப்பாளர் திட்டமிட்டார். இந்த வாக்கெடுப்பில் 7% பேர் பிரெட் மற்றும் முட்டை கேட்டு வாக்களித்தனர். 13% பேர் பூரி கேட்டு வாக்களித்தனர். 18% பேர் ஆலு பரோட்டா கேட்டு வாக்களித்தனர். 19% பேர் மசாலா தோசை கேட்டு வாக்களித்தனர். 20% பேர் இட்லி கேட்டு வாக்களித்தனர். ஆனால் 23 சதவீதம் பேர் உப்புமாவுக்கே வாக்களித்தனர். இதனால் மீண்டும் அந்த விடுதியில் உப்புமாவே பரிமாறப்பட்டது
இதனை ஆர்வமாக கேட்டுக்கொண்டிருந்த சபாநாயகர் சிரித்தே விட்டார். தொடர்ந்து பேசிய திருச்சி சிவா, இந்த உப்புமாதான் 2019-ல் வந்த பாஜக அரசு. எதிர்கட்சிகளிடம் ஒருமித்த கருத்து இல்லாததால் இப்படி நிகழ்ந்துவிட்டது. ஆனால் 2024-க்கான பணிகளை எங்கள் தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவிட்டார். அனைவரும் ஓரணியில் திரள்வது பற்றி ஆலோசிக்கிறோம். அனைவரும் ஒன்று சேருவோம். பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்றுவோம் என்றார்.