தமிழ்நாடு
நடிகர் விவேக் மரணத்திற்கு தடுப்பூசி காரணமா? தேசிய ஆய்வு குழு தகவல்

நடிகர் விவேக் தடுப்பூசி போட்டுக் கொண்ட இரண்டே நாட்களில் உயிரிழந்த நிலையில் இது குறித்த சந்தேகத்திற்கு தேசிய ஆய்வு குழு தகவல் அளித்து உள்ளது.
பிரபல நடிகர் விவேக் அவர்கள் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 15ஆம் தேதி கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி கொண்டார். அவர் தடுப்பூசி செலுத்தி கொண்ட இரண்டு நாட்களில் அதாவது ஏப்ரல் 17ஆம் தேதி திடீரென மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.
அவரது உயிரிழப்புக்கு கொரோனா தடுப்பூசி தான் காரணம் என முன்னணி அரசியல் கட்சி தலைவர்களே கூறி வந்தார்கள் என்பதும் இதனால் தடுப்பூசி மீது மக்கள் மத்தியில் ஒரு பயம் ஏற்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கொரனோ தடுப்பூசி பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்து வரும் தேசிய குழு விவேக் மரணத்திற்கு கொரோனா தடுப்பூசி காரணமல்ல என்பதை உறுதி செய்துள்ளது. அவருக்கு ஏற்பட்ட உயர் ரத்த அழுத்தம் காரணமாகவே மாரடைப்பு ஏற்பட்டு உள்ளதாகவும் அதன் காரணமாகவே அவர் உயிரிழந்ததாகவும் ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளதாக தேசிய ஆய்வுக் குழு தெரிவித்துள்ளது.
இதுகுறித்த புகாரின் அடிப்படையில் கடந்த சில மாதங்களாக ஆய்வு மேற்கொண்ட தேசிய ஆய்வு குழு தற்போது விவேக் மரணத்திற்கான காரணத்தை விளக்கமாக வெளியிட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


















