இந்தியா
ஜனநாயகம் குறித்து பாஜகவிற்கு பாடம் நடத்துவதா? சோனியா காந்திக்கு மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ பதிலடி!
பிரதமர் மோடியின் அறிக்கைகள் நாட்டின் முக முக்கியாமன பிரச்சனைகளைப் புறக்கணிக்கின்றன அல்லது அந்த விஷயங்களில் இருந்து திசைதிருப்ப மோடி வார்த்தை ஜிம்னாஸ்டிக்ஸ் ஆடிக்கொண்டிருக்கிறார். மோடி அரசின் செயல்பாடுகள் ஜனநாயகத்தின் வேரையே பிடிங்கி எறிகின்றன என காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி கூறியதற்கு மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ பதிலடி கொடுத்துள்ளார்.
பிரபல ஆங்கில நாளிதழ் தி ஹிந்துவில் தலையங்கப் பக்கத்தில் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி. அந்த கட்டுரையில், பிரதமர் மோடி நாட்டின் நாடாளுமன்ற, நிர்வாக, நீதித்துறைகளை கொஞ்சம் கொஞ்சமாக செயலற்றதாக்கி வருகிறார். அரசு தனது ஒவ்வொரு அதிகாரத்தையும் தவறாகவே பயன்படுத்தி வருகிறது. மோடி அரசின் செயல்பாடுகள் ஜனநாயகத்தின் வேரையே பிடிங்கி எறிகின்றன.
பாஜகவினரும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பினரும் சகிப்புத்தன்மையற்ற, வெறுப்புணர்வை தூண்டும் பேச்சுக்களை தொடர்ந்து பேசுகின்றனர். ஆனால் அதுபற்றி துளியும் கவலைப்படாத மோடி அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கு ஒருமுறை கூட அழைப்பு விடுக்கவில்லை. மோடியின் ஆட்சியில் மத பண்டிகைகளை மற்றவர்களை அச்சுறுத்தும், கொடுமைப்படுத்தும் வாய்ப்பாகவே பயன்படுத்துகின்றனர் என கூறியிருந்தார்.
இதற்கு பாஜக தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தனது டுவிட்டர் பக்கத்தில், ஜனநாயகம் குறித்து சோனியா காந்தி பாஜகவிற்கு வகுப்பெடுப்பதா? நீதித்துறை சுதந்திரம் குறித்து காங்கிரஸ் கட்சி பேசுவது மாயை போன்று உள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் எமர்ஜென்சி அமல்படுத்தப்பட்டபோது இந்தியாவின் ஜனநாயகம் மரித்துப்போனது.
சில குடும்பங்கள் தங்களை பெருமை மிக்கவர்களாக நினைக்கின்றனர். நாம் நீதிமன்றங்களை மதிக்க வேண்டும். ஆனால் காங்கிரஸ் கட்சியினர் தங்களை நீதிமன்றத்தை விட பெரியவர்களாக கருதுகின்றனர். எனவே தான் நீதிமன்ற தீர்ப்புகளை விமர்சிக்கின்றனர் என தெரிவித்தார்.