இந்தியா
இந்தியாவை முதன்மை நாடாக மாற்றுவேன்: அரவிந்த் கெஜ்ரிவால் பேச்சு!
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சிக்கு, தேசிய கட்சி என்ற அந்தஸ்து கிடைத்துள்ளது. இதனையொட்டி, டெல்லியில் கட்சியின் தலைமை அலுவலகத்தில் தொண்டர்களிடையே பேசினார் டெல்லி முதல்வர்.
ஆம்ஆத்மி – தேசிய கட்சி
அரவிந்த் கெஜ்ரிவால் பேசுகையில், இந்தியாவில், 1,300 அரசியல் கட்சிகள் உள்ளன. அவற்றில் 6 கட்சிகள் மட்டுமே தேசிய கட்சி எனும் அந்தஸ்தைப் பெற்றுள்ளன. அவற்றில், பா.ஜ.க, காங்கிரஸ் மற்றும் ஆம்ஆத்மி ஆகிய 3 கட்சிகள் மட்டுமே ஒன்றுக்கும் மேற்பட்ட மாநிலங்களில் ஆட்சி செய்து வருகின்றன. 10 ஆண்டுகள் எனும் குறுகிய காலத்திலேயே தேசிய கட்சி என்ற அந்தஸ்து கிடைத்திருப்பது, அற்புதமான மற்றும் நம்ப முடியாத சாதனையாகும். இதனால், நமக்கு பொறுப்பு மேலும் கூடியிருக்கிறது. இதற்காக பாடுபட்டுள்ள அனைத்து கட்சியினருக்கும் நன்றி எனத் தெரிவித்துள்ளார்.
முதன்மை நாடு
இந்தியாவின் முன்னேற்றத்தை தடுக்க நினைக்கும் அனைத்து தேச விரோத சக்திகளும் ஆம்ஆத்மிக்கு எதிராகத் தான் உள்ளனர். இருப்பினும் கடவுள் நம்முடன் இருக்கிறார். கடவுள், இந்தியாவிற்கு நாம் ஏதாவது செய்ய வேண்டும் என விரும்புகிறார். இந்தியாவை உலகத்தின் முதன்மை நாடாக மாற்றுவதற்கு பொதுமக்கள் அனைவரும் ஆம்ஆத்மியில் சேர வேண்டும்.
நாட்டுக்காக எனது இரத்தம் சிந்தப்பட்டால், நான் மிகவும் அதிர்ஷ்டசாலி. தேவை ஏற்பட்டால் கட்சியினர் சிறைக்கு செல்வதற்கும் தயாராக இருக்க வேண்டும். சிறைக்கு செல்வதைப் பற்றி பயம் கொண்டவர்கள், கட்சியை விட்டு விலகி விடலாம். தீவிர நேர்மை, தேசபக்தி மற்றும் மனிதநேயம் ஆகிய 3 தூண்களின் மீது ஆம்ஆத்மியின் சித்தாந்தம் உருவாக்கப்பட்டுள்ளது.
ஆம்ஆத்மி கட்சி மீதான கோடிக்கணக்கான பொதுமக்களின் எதிர்பார்ப்புகள், இப்போது நம்பிக்கையாக மாறிவிட்டது. கடவுள் ஆசியுடன் அதனை நிறைவேற்றுவோம். இந்திய அரசியலில், ஆக்கப்பூர்வமான மாற்றத்தை கொண்டு வருவதில் ஆம்ஆத்மி கட்சி வெற்றி பெற்றுள்ளது. நம்மைப் பார்த்து தான், மற்ற கட்சிகளும் இலவச மின்சாரம் கொடுப்போம் என வாக்குறுதி அளிக்கத் தொடங்கி உள்ளன என அரவிந்த் கெஜ்ரிவால் பேசினார்.