தமிழ்நாடு
பாஜக தலைவர்கள், அதிமுக அமைச்சர்கள் வக்கற்றவர்கள்: சூர்யாவுக்கு சீமான் ஆதரவு!
நடிகர் சீமான் புதிய கல்விக்கொள்கைக்கு எதிராக பேசியதை அடுத்து அவர் மீது தொடர் விமர்சனங்களை வைத்து வருகின்றனர் பாஜக மற்றும் அதிமுகவை சேர்ந்தவர்கள். இந்நிலையில் நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாக களமிறங்கியுள்ளார் நாம் தமிழர் கட்சியின் சீமான்.
மத்திய அரசு சமீபத்தில் புதிய கல்விக்கொள்கையை வெளியிட்டது. அதில் நாடுமுழுவதும் மும்மொழிக்கொள்கை அமல்படுத்துமாறு பரிந்துரை செய்யப்பட்டது. அதன்படி மூன்றாவது மொழியாக இந்தியை கட்டாயம் படிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்புகள் கிளம்பியது. இதனையடுத்து மத்திய அரசு இதில் திருத்தம் கொண்டுவந்து, இந்தி கட்டாயமல்ல, அவரவர் விருப்பம் போல படிக்கலாம் என அறிவித்தது.
இந்நிலையில் அகரம் அறக்கட்டளையின் 40-வது ஆண்டுவிழா சமீபத்தில் நடைபெற்றது. அப்போது பேசிய நடிகர் சூர்யா புதிய கல்விக்கொள்கைக்கு எதிராக ஆவேசமாக பேசினார். நீட்டுக்கு எதிராகவும், அனைவருக்கும் சமமில்லாமல் உள்ள கல்விமுறைக்கு எதிராகவும் சூர்யா பேசியது பலரை ஈர்த்தது. புதிய கல்விக்கொள்கை வரைவில் சில நல்ல அம்சங்கள் இருந்தாலும் அச்சம் தரக்கூடிய அம்சங்கள் பல இருக்கின்றன என சூரியா கூறியதையடுத்து பலரும் அதுபற்றி பேச ஆரம்பித்துள்ளார்கள். இதனால் நடிகர் சூர்யாவுக்கு பாராட்டுக்கள் குவிந்தவாறு உள்ளது. ஆனால் அரசியலில் சூர்யாவின் விமர்சனம் பல அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, பாஜக தமிழக தலைவர் தமிழிசை, அதிமுக அமைச்சர் கடம்பூர் ராஜு என அடுத்தடுத்து சூர்யா மீது விமர்சனங்கள் வைத்து அவருக்கு கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் தற்போது சூர்யாவுக்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், புதிய கல்விக்கொள்கைக் குறித்த சூர்யாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பாஜக தலைவர்களும், அதிமுக அமைச்சர்களும் அக்கல்விக்கொள்கை குறித்துப் பொது மேடையில் விவாதிக்கத் தயாரா? என சீமான் சவால் விடுத்துள்ளார். மேலும், சூர்யாவின் கருத்தை கருத்தால் வெல்ல முடியாத பாஜகவின் தலைவர்களும், அதிமுக அமைச்சர்களும் வழக்கம் போலத் தனிப்பட்ட தாக்குதல் தொடுப்பது, கருத்துரிமையையே கேள்விக்கு உள்ளாக்குவதாகும். இது கண்டனத்துக்குறியது.
சூர்யாவின் கருத்துக்குக் கண்டனம் தெரிவிக்கும் பாஜக தலைவர்கள், அதிமுக அமைச்சர்கள் அக்கல்வி கொள்கை குறித்துப் பொத மேடையில் மக்கள் முன்னிலையில் விவாதிக்கத் தயாரா? அவ்வாறு பொதுமக்கள் முன்னால் புதிய கல்விக் கொள்கை பற்றிய விவாதத்தை மேற்கொள்ள வக்கற்ற இவர்கள், இந்திய அரசியலமைப்புச் சாசனம் வழங்கி இருக்கிற அடிப்படை உரிமையான கருத்துரிமையையே நசுக்கும் வகையில் சூர்யாவின் பேச்சுக்கு உள்நோக்கம் கற்பிப்பதும், அவரைத் தனிப்பட்ட முறையில் வசைபாடுவதும் ஏற்புடையது அன்று. சூர்யாவுக்கு நாம் தமிழர் கட்சி துணை நிற்கும் என சீமான் கூறியுள்ளார்.