உலகம்
2500 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் சாப்ட்வேர் நிறுவனம்.. ஊழியர்கள் அதிர்ச்சி!
கடந்த சில மாதங்களாக உலகெங்கிலும் உள்ள முன்னணி நிறுவனங்கள் பணி நீக்க நடவடிக்கை எடுத்து வருகிறது என்பதும் அவற்றில் கூகுள், மைக்ரோசாஃப்ட், ஆப்பிள், டுவிட்டர், பேஸ்புக் உள்பட பல நிறுவனங்கள் அடங்கியது என்பதையும் ஏற்கனவே பார்த்து வருகிறோம்.
பொருளாதார மந்தநிலை, பணவீக்கம், கிட்டத்தட்ட அனைத்து நாடுகளின் கரன்சிகள் மதிப்பு குறைவு ஆகியவை காரணமாக பணிநீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. முன்னணி நிறுவனங்களின் வருமானம் குறைந்துவிட்டதால் செலவை குறைப்பதற்காக பணி நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தற்போது அமெரிக்காவை சேர்ந்த முன்னணி சாப்ட்வேர் நிறுவனங்களில் ஒன்றான சேல்ஸ்ஃபோர்ஸ் என்ற நிறுவனம் பணி நீக்க நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுவதால் இந்நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஏற்கனவே சேல்ஸ்ஃபோர்ஸ் நிறுவனம் கடந்த நவம்பர் மாதம் நூற்றுக்கணக்கான ஊழியர்களை பணி நீக்கம் செய்த நிலையில் தற்போது ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டிருப்பதாகவும் இதனால் ஊழியர்கள் பெரும் அச்சத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சேல்ஸ்ஃபோர்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் முக்கிய அதிகாரி ஒருவர் கூறியபோது எந்த நேரத்திலும் பணிநீக்க அறிவிப்பு வரலாம் என்று ஊழியர்கள் அச்சத்துடன் வேலை பார்த்து வருகிறார்கள் என்றும் கிட்டத்தட்ட 2500 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய சேல்ஸ்ஃபோர்ஸ் நிறுவனம் தயாராகி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்நிறுவனத்தில் இந்த ஆண்டு தொடக்கத்தில் 73,541 பேர் பணி புரிந்த நிலையில் அவர்களில் 2,500 பேர் பணிநீக்கம் செய்யப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி நிறுவனத்தின் துணை தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஆகியோர் பதவி விலக திட்டமிட்டிருப்பதாகவும், 2023 ஆம் ஆண்டு ஜனவரியில் புதிய தலைவர் மற்றும் நிர்வாக அதிகாரி பதவி ஏற்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
தொடர்ச்சியாக முன்னணி நிறுவனங்கள் பணி நீக்க நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் பணி பாதுகாப்பு இல்லாமல் ஊழியர்கள் பெரும் அச்சத்துடனேயே ஒவ்வொரு நாளும் வாழ்ந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.