இந்தியா
பதவி உயர்வு பெற்று சுவிஸ் சென்ற கூகுள் ஊழியர்: வேலையில் சேர்ந்த 2 வாரங்களில் பணிநீக்கம்..!
கூகுள் நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த ஊழியர் ஒருவர் பதவி உயர்வு பெற்று சுவிஸ் நாட்டிற்கு சென்ற நிலையில் அங்கு அவர் வேலையில் சேர்ந்த இரண்டு வாரத்தில் பணி நீக்கம் செய்யப்பட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில வாரங்களாகவே உலகின் முன்னணி நிறுவனங்கள் பணி நீக்க நடவடிக்கை எடுத்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பபெட் சுமார் 12,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்தது
இதுகுறித்து கூகுள் நிறுவனத்தின் சுந்தர் பிச்சை 12,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ததற்காக வருத்தமடைகிறேன் என்றும் வேறு வழியில்லாமல் தான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றும் இந்த முடிவுகளுக்கு நானே பொறுப்பு என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் இந்தியாவை சேர்ந்த அன்மெய் சஹைய் என்ற தொழில் நுட்ப நிபுணர் கூகுள் நிறுவனத்தின் இங்கிலாந்து கிளையில் பணி செய்து கொண்டிருந்தார். கடந்த 4 ஆண்டுகளாக அவர் பணி செய்து கொண்டிருக்கும் நிலையில் அவர் சுவிஸ் நாட்டிற்கு பதவி உயர்வு மூலம் அனுப்பப்பட்டார். இதனை அடுத்து அவர் மிகவும் மகிழ்ச்சியாக இங்கிலாந்து நாட்டில் தனது உடமைகளை காலி செய்துவிட்டு சுவிஸ் நாட்டின் கூகுள் நிறுவனத்தில் சேர்ந்தார். ஆனா லவர் இரண்டு வாரங்களில் பணி நீக்கம் செய்யப்பட்டதாக அவருக்கு கடிதம் வெளியானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து அன்மெய் தனது லிங்க்ட்-இன் பக்கத்தில் கூகுள் நிறுவனத்தில் நான்கு ஆண்டுகள் பணிபுரிந்தது தனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது என்றும் இங்கிலாந்திலிருந்து சுவிஸ் நாட்டிற்கு பதவி உயர்வுடன் மாற்றப்பட்டது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது என்றும் தெரிவித்தார்.
ஆனால் அந்த மகிழ்ச்சி நிலைக்கவில்லை என்றும் பதவி உயர்வு பெற்று இடமாற்றம் செய்யப்பட்ட இரண்டு வாரங்களில் பணியை இழந்தேன் என்றும் புதிய வேலைகளை கண்டுபிடிக்க உதவுங்கள் என்றும், அவர்தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். இந்த பதிவுக்கு ஏராளமான கமெண்ட்ஸ்களை சமூக வலைத்தள பயனர்கள் பதிவு செய்து வருகின்றனர்.