இந்தியா
6 ஆண்டுகள், 8 துணை கவர்னர்கள்.. ரிசர்வ் வங்கியில் திடீர் மாற்றம்!
ரிசர்வ் வங்கியின் கவர்னர் பதவி தற்போது மூன்று ஆண்டுகள் என இருந்து வரும் நிலையில் அதை ஆறு ஆண்டுகளாக மாற்ற செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல் ரிசர்வ் வங்கியில் நான்கு துணை கவர்னர்கள் இருக்கும் நிலையில் அதை எட்டு என உயர்த்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
நிதித்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு பாஜக எம்.பி. ஜெயந்த் சின்ஹா தலைமையில் இன்று ரிசர்வ் வங்கி கூட்டம் நடைபெற்றது. இதில் ரிசர்வ் வங்கியில் செய்ய வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்து ஆய்வு தயாரிக்கப்பட்டு அது குறித்த அறிக்கையும் தயாரானது.
டிசம்பர் 7ஆம் தேதி நாடாளுமன்ற கூட்டம் தொடங்கும் போது இந்த அறிக்கை மக்களவையில் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படும் என்றும், மக்களவை தலைவர் ஒப்புதல் கிடைத்தவுடன் இந்த அறிக்கை தாக்கல் ஆகும் என்றும் கூறப்படுகிறது.
இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள முக்கிய விஷயங்களில் ஒன்று ரிசர்வ் வங்கி கவர்னரின் பதவிக்காலத்தை 3 ஆண்டுகளில் இருந்து 6 ஆண்டுகளாக உயர்த்த வேண்டும் என்றும் துணை கவர்னர்களின் எண்ணிக்கையை 4ல் இருந்து 8 என உயர்த்த வேண்டும் என்றும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
மேலும் அரசு வங்கிகள் அனைத்தும் தற்போது நிதி அமைச்சக சேவையின் கீழ் இருந்து வரும் நிலையில் அதை ரிசர்வ் வங்கியின் கீழ் மாற்ற வேண்டும் என்றும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.