ஆரோக்கியம்
பெராலிசிஸ் அட்டாக் என்கிற பக்கவாதம் என்கிற ஸ்ட்ரோக் எப்படி ஏற்படுகிறது? தவிர்ப்பது எப்படி?

பக்கவாதம் என்பது ஒரு மருத்துவ அவசரநிலை. கொஞ்ச நேரம் ஓய்வெடுத்தால் சரியாகிவிடும் என்ற அலட்சியமாக இருந்து விடாமல் அறிகுறிகள் தென்பட்டவுடன் நோயாளியைத் தகுந்த வசதியுள்ள பெரிய மருத்துவமனைக்க அழைத்துச் செல்வதே அவரின் உயிரைக் காப்பதற்கான சிறந்த வழிமுறையாக இருக்கக் கூடும்.
உலகளாவிய ரீதியில் மரணத்தை ஏற்படுத்தும் மற்றும் நீண்டகால ஊனத்தை உண்டாக்கக் கூடிய நோய்களில் பக்கவாதம் முதன்மையான ஒன்று. மூளைக்குச் செல்லும் இரத்த ஓட்டத்தில் தடை ஏற்படும்போது அல்லது மூளையில் இரத்தக் கசிவு ஏற்படும்போது பக்கவாதம் ஏற்படுகிறது.
பக்கவாதம் ஏற்பட்ட முதல் 60 நிமிடங்கள் தங்க நேரம் (The Golden Hour) என்று அழைக்கப்படுகிறது. இந்த நேரத்திற்குள் நோயாளிக்குச் சரியான சிகிச்சை-இரத்த உறைதலை கரைக்கம் மருந்து வழங்கப்பட்டால் மூளைக்கு ஏற்படும் நிரந்தரச் சேதத்தை தடுத்து நோயாளியைப் பூரண குணமடையச் செய்ய முடியும்.
பக்கவாதம் ஏற்பட்டு முதல் 4 முதல் 5 மணி நேரத்திற்குள் சிகிச்சை அளிப்பது அவசியமென்றாலும் முதல் 60 நிமிடங்களே சிகிச்சை முழுமையான பலனைத் தரக்கூடிய மிக முக்கியமான காலப்பகுதியாகும்.
பக்கவாதத்தை எளிதில் கண்டறிய F.A.S.T. முறை
பக்கவாதத்தின் அறிகுறிகளை மிக எளிதாக F.A.S.T. என்ற சூத்திரத்தின் மூலம் நினைவில் வைத்துக் கொள்ளலாம். இந்த அறிகுறிகள் தெரிந்தால் அடுத்த சில நிமிடங்களே மிக முக்கியமானவை.
F – Face (முகம்) – நோயாளியின் முகத்தில் ஒரு பக்கம் வழக்கத்திற்கு மாறாக கோணலாக அல்லது தொய்வாக இருக்கிறதா?
A – Arms (கைகள்) – இரண்டு கைகளையும் மேலே உயர்த்தச் சொன்னால் ஒரு கை மட்டும் தானாகவே கீழே இறங்குகிறதா அல்லது பலவீனமாக இருக்கிறதா. உடலின் ஒரு பக்கம் பலவீனமாக அல்லது மரத்துப் போய் (Numbness) உள்ளதா?
S – Speech (பேச்சு) – பேசும்போது சொற்கள் குழறுகிறதா? சொல்ல வரும் விடயம் மற்றவர்களுக்குப் புரியாமல் குழறுவது போன்று இருக்கிறதா?
T – Time (நேரம்) – மேற்கூறிய ஏதேனும் ஒரு அறிகுறி தென்பட்டாலும் தாமதிக்காமல் உடனே மருத்துவமனைக்குச் செல்ல வேண்டிய நேரம் அது.
பக்கவாதம் ஏற்படுவதற்கான காரணங்கள் என்னென்ன?
- இரத்த அடைப்பு (Ischemic Stroke) – மூளைக்கு இரத்தத்தைக் கொண்டு செல்லும் குழாய்களில் கொழுப்பு அல்லது இரத்த உறைவு காரணமாக அடைப்பு ஏற்படுதல். இதுவே 80% பக்கவாதங்களுக்குக் காரணம்.
- இரத்தக் கசிவு (Haemorrhagic Stroke) – மூளையில் உள்ள பலவீனமான இரத்தக் குழாய் வெடித்து இரத்தக் கசிவு ஏற்படுதல்
யாரெல்லாம் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும்?
- உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள். (High BP)
- நீரிழிவு நோய் மற்றம் அதிக உடல் பருமன் உள்ளவர்கள் (Diabetes).
- இரத்த்த்தில் கொலஸ்ட்ரால் அளவு அதிகம் உள்ளவர்கள்.
- புகைப் பிடித்தல் மற்றம் மது அருந்தும் பழக்கம் உள்ளவர்கள்.
- ஒழுங்கற்ற இதயத் துடிப்பு உள்ளவர்கள். (Atrial Fibrillation).
பக்கவாதம் ஏற்படாமல் தவிர்ப்பது எப்படி?
- உப்பைக் குறைத்து நார்ச்சத்து பொரட்கள் நிறைந்த காய்கறிகள் மற்றும் பழங்கள் அதிகம் உட்கொள்ளுங்கள்.
- தினமும் குறைந்தது 30 நிமிடங்களேனும் நடைப்பயிற்சி மேற்கொள்ளுங்கள்.
- இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவைத் தொடர்ச்சியாகக் கண்காணியுங்கள்.
குறிப்பு – இங்கே குறிப்பிட்ட தகவல்கள் எல்லாம் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இது ஒரு மருத்தவரின் ஆலோசனைக்கு மாற்றானது அல்ல. எந்தவொரு நேரத்திலும் சுயமாக முடிவெடுக்காமல் மருத்துவ ஆலோசனையைப் பெறுவது மிகவும் அவசியமானதாக இருக்கும்.
















