செய்திகள்
கொரோனா பயத்தில் தாய், மகன் தற்கொலை – மதுரையில் அதிர்ச்சி
தமிழகத்தில் கொரோனா 3வது அலை வேகமாக பரவி வருகிறது. நேற்று ஒரு நாளில் 11 ஆயிரம் பாதிக்கப்பட்டனர். எனவே, தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிறு முழு ஊரடங்கு என அறிவித்துள்ளது.
ஒருபக்கம் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், தடுப்பூசி மீதுள்ள அச்சத்தில் சிலர் அதை போட்டுக்கொள்ள தயக்கம் காட்டி வருகின்றனர். ஒருபக்கம் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டால் உயிர் போய்விடும் எனவும் அறியாமை காரணமாக சிலர் நினைக்கிறார்கள். இந்த அறியாமையால் மதுரையில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
மதுரை கல்மேடு எம்.ஜி.ஆர் நகர் பகுதியை சேர்ந்த ஜோதிகா என்பவர் கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவர் தனது 3 வயது மகன் ரித்தீஷோடு தனது தாய் லட்சுமி மற்றும் தம்பி சிபிராஜுடன் வசித்து வந்தார்.
சமீபத்தில் ஜோதிகாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. எனவே, வீட்டில் அனைவருக்கும் பரவி விடும் என்கிற பயத்தில் ஜோதிகா, லட்சுமி, ரித்தீஷ் ஆகியோர் தற்கொலை செய்ய முடிவெடுத்து சாணி பவுடரை கரைத்து குடித்தனர். தனது 3 வயது மகன் ரித்தீஷையும் அதை குடிக்க வைத்தனர். இதில், ஜோதிகாவும், ரித்தீஷும் உயிரிழந்தனர். லட்சுமியும், சிபிராஜும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா என்பது குணமடையக்கூடிய நோய் என்பதை மக்கள் உணர வேண்டும். கொரோனா நோய்க்கு தற்கொலை தீர்வல்ல, தடுப்பூசி போட்டுக்கொள்வது, நோய்த்தடுப்பு வழிமுறைகளை கடைபிடிப்பதன் மூலம் கொரோனா பாதிப்பிலிருந்து தற்காத்து கொள்ள முடியும் என மக்கள் உணர வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.