தமிழ்நாடு
கோயிலும் அங்கேதான் இருக்கும்; சாமியும் அங்கேதான் இருப்பார்” – சீமான்

கோவிலும் அங்கேயேதான் இருக்கும், சாமியும் அங்கேயேதான் இருக்கும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பாஜகவுக்கு மறைமுகமாக பதிலடி கொடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கோவில்களில் வெள்ளி, சனி, ஞாயிறுகிழமைகளில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என தமிழக அரசு நிபந்தனை விதித்துள்ளது. இதனை அடுத்து பாஜக போராட்டம் நடத்தி வருகிறது என்பதும் டாஸ்மார்க் உள்பட அனைத்தும் திறக்கப்பட்ட நிலையில் கோவில்களுக்கு மட்டும் ஏன் இந்த கட்டுப்பாடு என்று கூறி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக பாஜகவின் ’பி’ டீம் தான் நாம் தமிழர் கட்சியின் சீமான் என்று கூறப்பட்டு வரும் நிலையில் தற்போது பாஜகவை மறைமுகமாக எதிர்க்கும் வகையில் அவர் இந்த கோவில் திறக்கும் விஷயத்தில் கருத்து கூறியுள்ளார்
கோவிலும் அங்கேயேதான் இருக்கும், சாமியும் அங்கே தான் இருப்பார் என்றும், வழிபாட்டு தலங்களில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு இருப்பது சரியான அணுகுமுறை தான் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும் கொரோனா பின் வழிபாடுகளை நடத்திக்கொள்ளலாம் என்றும் திடீரென கொரோனா பரவினால் அரசை குறை சொல்வதற்கா? என்றும் அவர் பாஜக தலைவர்களை நோக்கி கேள்வி எழுப்பியுள்ளார். கோவில் திறப்பு குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறிய இந்த கருத்து தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






















