சினிமா செய்திகள்
ஜனநாயகன் படத்திற்கு ஏதோ ஒரு சான்றிதழ் கொடுக்கலாம்: சீமான் கருத்து

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம், ஜனவரி 9-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை தணிக்கைச் சான்றிதழ் கிடைக்காதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. படம் வெளியீட்டுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் தணிக்கை நடைமுறை தாமதமாகி வருவது ரசிகர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக, விஜய் சார்பில் நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி, “ஜனநாயகன் படத்தின் வெளியீட்டை ஜனவரி 10-ம் தேதிக்கு ஏன் தள்ளி வைக்கக் கூடாது? தை பிறந்தால் வழி பிறக்குமே?” என கேள்வி எழுப்பினார். இதனால் திரைப்பட வெளியீடு தள்ளிப் போகுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இதுகுறித்து நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கருத்து தெரிவித்தபோது, “ஜனநாயகன் படத்திற்கு ஏதோ ஒரு சான்றிதழ் கொடுக்கலாம். அதன் தெலுங்குப் பதிப்பை பார்த்துள்ளேன். அதில் தணிக்கைக்கு நெருக்கடி தரும் அளவிற்கு எதுவும் இல்லை. தணிக்கைச் சான்றிதழுக்காக இவ்வளவு இழுத்தடிக்க வேண்டிய அவசியமே இல்லை” என கூறினார்.
இதற்கிடையே, ஜனநாயகன் படத்துடன் போட்டியாக வெளியாக உள்ள சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘பராசக்தி’ திரைப்படத்திற்கும் இன்னும் தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படவில்லை. இரு திரைப்படங்களும் தணிக்கை குழு கேட்டுள்ள மாற்றங்களை செய்து, மறு தணிக்கைக்காக காத்திருக்கின்றன.
பராசக்தி திரைப்படத்தின் திருத்தப்பட்ட பதிப்பை தணிக்கை குழுவினர் ஏற்கனவே பார்த்துவிட்டதாகவும், ஜனநாயகன் படத்தின் திருத்தப்பட்ட பதிப்பை தணிக்கை குழுவினர் இன்று பார்ப்பார்கள் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜனவரி 7 அல்லது 8-ம் தேதி மாலைக்குள் ‘ஜனநாயகன்’ மற்றும் ‘பராசக்தி’ ஆகிய இரு திரைப்படங்களுக்கும் தணிக்கை குழுவினர் ஒப்புதல் வழங்குவார்கள் என பூமி டுடே தளத்திற்கு கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் இரண்டு படங்களும் திட்டமிட்டபடி வெளியாகும் என்ற நம்பிக்கை திரையுலக வட்டாரங்களில் நிலவி வருகிறது.



















