தமிழ்நாடு
அவர் அமைச்சர் பதவியில் தொடர அருகதையற்றவர்: ராஜேந்திர பாலாஜியின் சர்ச்சை பேச்சு!

நாகர்கோவிலில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, கமலின் கட்சி கருவிலேயே கலைக்கப்பட வேண்டிய சப்பாணிக் குழந்தை என்றார். மாற்றுத்திறனாளிகளை காயப்படுத்தும் விதமாக அமைந்த இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இது தொடர்பாக தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத் தலைவர் சு.ஆ. பொன்னுசாமி தனது கடுமையான கருத்தை முன்வைத்துள்ளார். அதில், மாற்றுத் திறனாளிகள் என்றால் அரசியல்வாதிகளுக்கெல்லாம் கிள்ளுக் கீரையாகத் தெரிகிறது. கருவில் இருக்கும் குழந்தை உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்தாலும்கூட அக்குழந்தையின் கருவைக் கலைக்க சட்டம் அனுமதிக்காதபோது நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருப்பது பொறுப்பான அமைச்சருக்கு அழகல்ல. அவர் அமைச்சர் பதவியில் தொடரச் சற்றும் அருகதையற்றவர்.
மாற்றுத் திறனாளிகளின் மனம் புண்படும் வகையில் பேசிய தமிழகப் பால்வளத் துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜியை சென்னையில் உள்ள ஏதேனும் ஒரு மாற்றுத் திறனாளிகளின் காப்பகத்தில் குறைந்தபட்சம் ஒரு மாத காலம் தங்கியிருந்து அவர்களுக்குப் பணிவிடை செய்ய உத்தரவிட வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைத்துள்ளார்.





















