இந்தியா
‘தில்லு இருந்தா தொட்டுப் பாருங்க..!’- பாஜக-வுக்கு மம்தா சவால்
’உங்களால் முடிந்தால் என்னை அசைத்துப் பாருங்கள்’ என பாஜக-வுக்கு எதிராக சவால் விடுத்துள்ளார் மேற்குவங்க முதல்வர் மம்தா பேனர்ஜி.
கொல்கத்தாவில் பேரணி ஒன்றில் பேசிய மம்தா பேனர்ஜி, “மேற்கு வங்கத்தில் என்னை வேண்டுமானால் அசைத்துப் பாருங்கள். எனது ஆட்சியைக் கலைத்துவிட்டு குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு உத்தரவிடுங்கள். அதற்குப் பின் பாருங்கள் என்னால் என்ன முடியும் என்பதை” என ஆக்ரோஷமாகப் பேசியுள்ளார்.
மேற்கு வங்கத்தில் சமீபகாலமாக பாஜக- திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய இரு தரப்பினருக்கும் இடையே தினந்தோறும் மோதல்கள் வெடித்துக் கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மம்தா கூறுகையில், “பாஜக என்னை பயமுறுத்தப் பார்கிறது. என்னை ஆட்சியில் இருந்து தூக்கினால் எனக்கு மகிழ்ச்சியே. என் அரசாங்கப் பணிச்சுமை குறையும். இதனால் வீதி வீதியாக இறங்கி சென்று போராட்டங்களையும் பேரணிகளையும் நடத்தி உங்கள் ஆட்சியையே உலுக்குவேன்” என விளாசித்தள்ளி உள்ளார் மம்தா பேனர்ஜி.