இந்தியா
மீண்டும் மூடப்படுகிறதா திரையரங்குகள், ஓட்டல்கள்? முதல்வர் எச்சரிக்கை!

தமிழகம் உள்பட இந்தியாவின் ஒரு சில மாநிலங்களில் மீண்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து மத்திய அரசு மாநில அரசுகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறது. வரும் 17ஆம் தேதி பிரதமர் மோடி அனைத்து மாநில முதல்வர்களுடன் காணொளி மூலம் ஆலோசனை செய்ய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா தடுப்பூசி போடுவதை அதிகப்படுத்துவது மற்றும் ஒரு சில இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பது போன்ற ஆலோசனையில் பிரதமர் முதல்வர்களுடன் கலந்தாலோசிக்க வாய்ப்பு என தெரிகிறது.
இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் தினமும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. நேற்று 15 ஆயிரத்துக்கும் அதிகமானோர் மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை அனைவரும் ஒழுங்காக கடைபிடிக்க வேண்டும் என்றும் இல்லையென்றால் திரையரங்குகள், ஓட்டல்கள், தங்கும் விடுதிகளை மீண்டும் மூட அரசு உத்தரவிடும் என்றும் அம்மாநில முதல்வர் எச்சரித்துள்ளார். ஏற்கனவே மகாராஷ்டிர மாநிலத்தில் திரையரங்குகளில் 50 சதவீத அளவிற்கே பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில் மீண்டும் திரையரங்குகள் மூடப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அதேபோல் திருமண நிகழ்ச்சியில் 50 பேரும், இறுதி சடங்குகளில் 20 பேர்கள் மட்டுமே பங்கேற்கலாம் என்று கட்டுப்பாடு இருக்கும் நிலையில் பல இடங்களில் கட்டுப்பாட்டு மீறப்படுவதாக மகாராஷ்டிர அரசு எச்சரித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


















