இந்தியா
3 மாத ஆண் குழந்தைக்கு “லேப்ராஸ்கோபிக்” சிகிச்சை: எய்ம்ஸ் மருத்துவர்கள் சாதனை!
இந்தியத் தலைநகர் டெல்லியில் இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 3 மாதங்களே ஆன ஆண் குழந்தைக்கு, 2 சிறுநீரகங்களிலும் அடைப்பு ஏற்பட்டது. சிறுநீர்ப் பாதையில் அடைப்பு இருந்த காரணத்தால், சிறுநீர்ப் பைக்கு சிறுநீரகத்தில் இருந்து சிறுநீர் செல்வது பாதிக்கப்பட்டு பிரச்சனை தீவிரமானது.
லேப்ராஸ்கோபிக்
சிறுநீர் அடைப்பால் பாதிக்கப்பட்ட 3 மாத ஆண் குழந்தைக்கு, ‘லேப்ராஸ்கோபிக்’ சிகிச்சையின் மூலம் சிறுநீர் அடைப்பை நீக்க மருத்துவர்கள் முடிவு செய்தனர். கடந்த டிசம்பர் மாதத்தில், குழந்தைகள் மருத்துவத் துறைத் தலைவர் டாக்டர் பாஜ்பாய் தலைமையில் மருத்துவர்கள், மயக்க மருந்தைக் கொடுத்து ஆபரேஷன் செய்து முடித்தனர். சுமார் 2 மணி நேரத்தில் இந்த சிக்கலான ஆபரேஷன் முடிந்தது.
ஆபரேஷன் முடிந்து, அடுத்த மூன்று நாட்களில் குழந்தை வீட்டிற்கு அனுப்பப்பட்டது. ஆபரேஷன் செய்து 4 மாதங்கள் ஆகியுள்ள நிலையில், குழந்தைக்கு மருத்துவர்கள் ‘ரெனோகிராம்’ சோதனையைச் செய்தனர். இந்த சோதனையில், சிறுநீர் அடைப்பு நீங்கி, சிறுநீர்த் தடையின்றி வருவது தெரிய வந்தது. ஆகவே, சோதனை வெற்றி பெற்றுள்ளது என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இனி எதிர்காலத்தில் அக்குழந்தைக்கு ஆபரேஷன் செய்ய வேண்டிய நிலைமை ஏற்படாது என்றும் மருத்துவர்கள் கூறினர். சிறுநீரக அடைப்பிற்கு ‘லேப்ராஸ்கோபிக்’ ஆபரேஷன் செய்யப்பட்ட, உலகிலேயே மிகவும் இளவயது நோயாளி எனும் பெயரை, இந்த சிறு குழந்தை பெற்றுள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.