இந்தியா
ஆப்பிள் நிறுவனத்தின் பிரத்யேக ஸ்டோர் டெல்லியில் திறப்பு!

நம்மில் பலருக்கும் மிகப் பிடித்தமான மொபைல் என்றால் அது ஆப்பிள் ஐபோன் தான். ஆனால், இதன் விலை அதிகம் என்பதால் பலரால், இந்த மொபைலை வாங்க முடியவில்லை. இருப்பினும், சிலர் இஎம்ஐ வசதிகளைப் பயன்படுத்தி வாங்கி வருகின்றனர். இந்நிலையில்,
ஆப்பிள் ஐபோன் நிறுவனம் தலைநகர் டெல்லியில் ஒரு கிளையை திறந்துள்ளது.
ஆப்பிள் ஐபோன்
ஆப்பிள் ஐபோன் நிறுவனம் தமிழகம் உள்ளிட்ட சில பகுதிகளில் ஐபோன்களை உற்பத்தி செய்து வருகின்றது. இங்கிருக்கும் சந்தை வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தி, ஐபோன் விற்பனையை அதிகரிக்கும் வகையில் இந்தியாவில் பிரத்யேக ஸ்டோரை திறக்க முடிவு செய்தது. இந்தியாவில், ஆப்பிள் நிறுவனம் அடியெடுத்து வைத்து 25 ஆண்டுகள் முடிந்துள்ள நிலையில், மும்பையின் பாந்த்ரா குர்லா வளாகத்தில் பிரத்யேக ஸ்டோரை அமைத்தது.
பிரத்யேக ஆப்பிள் ஸ்டோர்
இந்தியாவில் எப்போது பிரத்யேக ஆப்பிள் ஸ்டோர் திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு, அதன் பயனர்கள் இடையில் இருந்தது. இப்போது இந்த செயல் நிஜமாகி உள்ளது. இந்நிலையில், ஆப்பிள் நிறுவனம் மற்றொரு பிரத்யேக ஸ்டோரை தலைநகர் டெல்லியில் இன்று திறந்துள்ளது.
தலைநகர் டெல்லியின் சாகேட்டில் இருக்கும் செலக்ட் சிட்டி வாக் மாலில், ஆப்பிள் சிஇஓ டிம் குக், இந்த ஸ்டோரை திறந்து வைத்தார். அதன் பின்னர், ஆப்பிள் நிறுவனப் பணியாளர்களுடன் கலந்துரையாடி, கைத்தட்டி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். பிறகு, ஆப்பிள் பிரத்யேக ஸ்டோருக்கு வருகை தந்த வாடிக்கையாளருடன் சற்று நேரம் பேசினார்.