இந்தியா
மே 2ல் முழு முடக்கத்திற்கு உத்தரவிட முடியாது: இதுவும் உயர்நீதிமன்றத்தின் உத்தரவுதான்!

தமிழகம் மற்றும் புதுவை மாநிலங்களில் மே இரண்டாம் தேதி வாக்கு எண்ணிக்கை நாளன்று முழு ஊரடங்கு அமல்படுத்துவது மட்டுமின்றி மே 1ஆம் தேதியும் முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என தமிழகம் மற்றும் புதுவை அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் பரிந்துரை செய்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
மேலும் தேர்தல் ஆணையத்தின் கவனக்குறைவால் தான் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்தது என்றும் தேர்தல் ஆணையத்தின் மீது கொலை வழக்கு தொடர்ந்தாலும் தவறில்லை என்றும் கடுமையாக விமர்சனம் செய்தது.
இந்த நிலையில் தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் மே இரண்டாம் தேதி வாக்கு எண்ணிக்கை நாளின் போது முழு ஊரடங்கு தேவை இல்லை என்றும் முழு ஊரடங்கு பிறப்பிக்க உத்தரவிட முடியாது என்றும் அம்மாநில உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மே இரண்டாம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் தினத்தில் தேர்தல் ஆணையம் வாக்கு எண்ணிக்கைக்கான அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாக செய்துள்ளது என்றும் அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளையும் பின்பற்றி தேர்தல் ஆணையம் நடந்து வருகிறது என்றும் இதனால் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளில் முழு முடக்கம் விதிக்க உத்தரவிட முடியாது என்றும் கேரள உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மேலும் மாநில தேர்தல் ஆணையம் மற்றும் மாநில அரசு பிறப்பித்துள்ள நடவடிக்கைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டு, மேலும் இதுகுறித்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் மற்றும் புதுவையில் மே 1ஆம் தேதியே முழு முடக்கம் வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் பரிந்துரை செய்த நிலையில் கேரள உயர்நீதிமன்றம் மே 2ல் கூட முழு ஊரடங்கு தேவையில்லை என்று கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



















