தமிழ்நாடு
நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கு செப். 25-ஆம் தேதி தீர்ப்பு: வீரப்பனும் இல்லை, ராஜ்குமாரும் இல்லை!

கன்னட நடிகர் ராஜ்குமார் வீரப்பனால் கடத்தப்பட்ட வழக்கில் வரும் செப்டம்பர் 25-ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. வீரப்பனும், ராஜ்குமாரும் தற்போது உயிரோடு இல்லாத சூழ்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு வர உள்ளது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2000-வது ஆண்டு ஜூலை 30-ஆம் தேதி கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரை சந்தன கடத்தல் வீரப்பனின் கும்பல் கடத்தில் சென்றது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சுமார் 108 நாட்கள் நடிகர் ராஜ்குமாரை தனது கஸ்டடியில் வைத்திருந்த வீரப்பன் பின்னர் விடுவித்தார்.
அதன் பின்னர் வீரப்பன் உள்ளிட்ட 11 பேர் மீது இந்த கடத்தல் தொடர்பாக தாளவாடி போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கின் விசாரணை கோபிச்செட்டிப்பாளையம் கூடுதல் குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த விசாரணை காலத்தில் 2006-ஆம் ஆண்டு நடிகர் ராஜ்குமார் காலமானார். மேலும் 2004-ஆம் ஆண்டு போலீசார் நடத்திய என்கவுண்டரில் வீரப்பனும், சேத்துக்குளி கோவிந்தனும் கொல்லப்பட்டனர்.
மீதமுள்ள 9 பேர் மீது விசாரணை நடந்து வந்தது. தற்போது 18 ஆண்டுகள் கழித்து வீரப்பனும், ராஜ்குமாரும் இல்லாத சூழ்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு வரும் 25-ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. அன்று 9 பேரும் நேரில் ஆஜராக உள்ளனர். இது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.



















