தமிழ்நாடு
மீ டூ-வை கேலி செய்யாதீர்கள்: கமல்ஹாசன் விளக்கம்!

மீ டூ மூலமாக தைரியமாக எழ வேண்டிய குரல்கள் எழுந்து வருவதால் அதனை யாரும் கேலி செய்யாதீர்கள் என நடிகர் கமல் ஹாசன் மாணவர்கள் மத்தியில் பேசியுள்ளார்.
நாடு முழுவதும் மீ டூ விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தமிழகத்தில் பிரபல கவிஞர் வைரமுத்து மீது பிரபல பாடகி சின்மயி பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்தது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து பலரும் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொந்தரவுகள் குறித்து தைரியமாக வெளியில் பேச ஆரம்பித்துள்ளனர்.
இந்நிலையில் சென்னை ஜேப்பியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட நடிகர் கமல் மீ டூ குறித்து பேசினார். அதில், மீ டூ என்று ஆங்கிலத்தில் சொல்வது நன்றாக உள்ளது. நானும் பாதிக்கப்பட்டுள்ளேன் என்பதை உள்ளடக்கிய சொல்தான் அது. தற்போது இது கோரஸாக எழுகிறது.
இப்போது ஏன் அதனை சொல்கிறார்கள் என்று சிலர் கோபித்துக் கொள்கிறார்கள். எப்போது எழுந்தால் என்ன? நியாயமாக, தைரியமாக எழ வேண்டிய குரல் எழுந்து கொண்டிருக்கிறது, அது எழட்டும். அதனை கேலி செய்யாதீர்கள். உடன்கட்டை ஏறுதல் என்பதை இறுநூறு வருடங்களுக்கு முன்பு சொன்னாலும் தவறுதான், அதை தற்போது சொன்னாலும் தவறுதான் என கமல் பேசினார்.




















