சினிமா
ஒடிசா ரயில் விபத்து: கமல்ஹாசன் முதல் ராஷ்மிகா மந்தனா வரை இரங்கல்
ஒடிசாவில் நேற்று மாலை நடைபெற்ற கோர விபத்து காரணமாக 260க்கும் மேற்பட்ட நபர்கள் பலியாகி உள்ளனர். 800க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கோரமண்டல் எக்ஸ்பிரஸ், பெங்களூர் – ஹவுரா எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில் என ஒரே நேரத்தில் அடுத்தடுத்து 3 ரயில்கள் மோதிய நிலையில், பெரும் விபத்து ஏற்பட்டது.
இந்த ரயில் விபத்து நாட்டையே உலுக்கிய நிலையில், பாலிவுட் பிரபலங்கள் முதல் கோலிவுட் பிரபலங்கள் என பலரும் இரங்கல் தெரிவித்தும் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தியும் வருகின்றனர்.
கமல்ஹாசன், அக்ஷய் குமார், அல்லு அர்ஜுன், ஜூனியர் என்டிஆர், அனுஷ்கா, பிரியா ஆனந்த், வைரமுத்து, காளி வெங்கட், கிருத்தி சனோன், பரிணீத்தி சோப்ரா, விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் தங்கள் கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.
நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், ”ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே இரு பயணிகள் ரயில்களும், ஒரு சரக்கு ரயிலும் மோதிக் கொண்ட விபத்தில் 280-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததும், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதும் மிகுந்த வேதனையையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது. நாட்டையே உலுக்கியுள்ள இந்த விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது நம் வேதனையை அதிகரிக்கிறது. உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுமென விழைகிறேன். உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இந்த ரயில் விபத்து, இந்திய வரலாற்றின் மாபெரும் துயரங்களில் ஒன்றாக மாறியிருக்கிறது. பாதிக்கப்பட்டவர்கள், விபத்தின் தாக்கத்தில் இருந்து மீள தேச மக்கள் அனைவரும் துணை நிற்போம்.” என பதிவிட்டுள்ளார்.
நடிகர்கள் ரஜினிகாந்த், விஜய், அஜித், சூர்யா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் இதுகுறித்து எந்தவொரு பதிவும் போடாமல் உள்ளது சமூக வலைதளங்களில் கேள்விக்குறியாகி உள்ளது.