தமிழ்நாடு
நான் முழுநேர அரசியலில் ஈடுபட மாட்டேன்: கேள்வி கேட்டவரிடம் கமல்ஹாசன் காட்டம்!
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் அனைத்து தொகுதிகளிலும் தனித்து களமிறங்கியது. சந்தித்த முதல் தேர்தலிலேயே கணிசமான வாக்குகளை பெற்று கமல்ஹாசனின் கட்சி அனைத்து அரசியல் கட்சியினரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.
ஐந்து தொகுதிகளில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்று கவனம் ஈர்த்துள்ளது மக்கள் நீதி மய்யம். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசனிடம் செய்தியாளர் ஒருவர், இத்தனை லட்சம் மக்கள் உங்களை நம்பி வாக்களித்திருக்கிறார்கள். மக்கள் நீதி மய்யத்தின் பொறுப்பு அதிகரித்திருக்கிறது. இனியும் முழு நேர அரசியலில் இல்லாமல் பிக் பாஸ், இந்தியன் என்று டிவி, திரைப்படத்துறைக்கு செல்வது சரியா? என கேள்வி எழுப்பினார்.
இதற்கு கமல், காட்டமாகவும் குரல் உயர்த்தியும் பதில் அளித்தார், நான் முன்பே சொல்லியிருக்கிறேன், அரசியல் என் தொழில் அல்ல. அது என் எக்ஸ்டரா கரிக்குலர் கடமை. நான் டாக்டராக இருந்தால் ஊசி போட்டு சம்பாதிப்பேன். மத்தவங்களுக்கு வைத்தியம் பாத்திருப்பேன். இப்போ எனக்கு தெரிஞ்ச தொழிலில் நேர்மையா சம்பாரிக்கிறேன். அது தப்பு கிடையாது.
அரசியலை முழுசா தொழிலா வச்சுகிட்டாதான் தப்பு. நீங்க ஒரு நல்ல ஆஃபிஸ் கொடுங்க, பொறுப்பு கொடுங்க. கொடுத்து, இதை முழு நேரமா பாருன்னு சொல்லுங்க. அப்போ நான் முழு நேரமா அரசியல் மட்டும் செய்றேன். மக்கள் நீதி மய்யத்தில் யாரும் அரசியலை முழு நேர தொழிலாக செய்ய மாட்டார்கள் என்று தெரிவித்தார் கமல்.