தமிழ்நாடு
நானும் டெல்டாக்காரன் தான்: சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு!

தஞ்சை, கடலூர், அரியலூர் மாவட்டங்களில் நிலக்கரி எடுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும், மொத்தம் 66 இடங்களில் ஆழ்துளையிட்டு நிலக்கரி எடுப்பதற்கான அறிவிப்பாணையை மத்திய அரசு வெளியிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கு தமிழகத்தில் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளநிலையில் தமிழக சட்டசபையில் இந்த விவகாரம் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

திமுக, காங்கிரஸ், அதிமுக, பாமக, விசிக கட்சிகள் சார்பாக கொண்டு வரப்பட்ட இந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தில் பதில் அளித்து பேசிய முதல்வர் ஸ்டாலின், டெல்டா பகுதியில் நிலக்கரி சுரங்க ஏலத்திற்கு மத்திய அரசின் அறிவிப்பாணை செய்தி கேட்டு நீங்கள் எல்லோரும் எப்படி அதிர்ச்சிக்கு ஆளானீர்களோ அதுபோல் நானும் அதிர்ச்சிக்கு ஆளானேன்.
உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்புகொண்டு பேசி, பின்னர் பிரதமருக்கு கடிதம் எழுதினேன். அந்த கடிதத்தின் நகலை திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் டி.ஆர்.பாலுவுக்கு ஒரு பிரதி அனுப்பி உடனடியாக சம்பந்தப்பட்ட அமைச்சரை சந்தித்து நம்முடைய எதிர்ப்பையும், நான் பிரதமருக்கு எழுதிய கடிதத்தையும் தர வேண்டும் என உத்தரவிட்டுள்ளேன். அவரும் அதற்கான முயற்சியில் ஈடுபட்டார்.
சம்பந்தப்பட்ட அமைச்சர் வெளியூரில் இருக்கின்ற காரணத்தால் நேரில் சந்திக்க முடிவில்லை. இதனால் டி.ஆர்.பாலு தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார். அப்போது தமிழக முதல்வர் அனுப்பிய கடிதத்திற்கு நிச்சயமாக நாங்கள் மதிப்பளிப்போம் கவலைப்பட வேண்டாம் என உறுதியாக மத்திய அமைச்சர் சொன்னதாக டி.ஆர்.பாலு சொல்லியிருக்கிறார்.
எனவே முதலமைச்சராக மட்டுமின்றி, நானும் ஒரு டெல்டாக்காரன் என்ற முறையில் அங்கு அறிவிக்கப்பட்டுள்ள மத்திய அரசின் நிலக்கரி சுரங்க ஏலத்திற்கு தமிழக அரசு அனுமதி அளிக்காது என்பதை உறுதியாக தெரிவித்துக்கொள்கிறேன் என முதல்வர் ஸ்டாலின் பேசினார்.





















