இந்தியா
நிர்மலாவின் சான்றிதழ் எனக்கு தேவையில்லை: என்.ராம் பளேர் பதிலடி!

ரஃபேல் விவகாரத்தில் இந்து ஆங்கில நாளேடு இன்று வெளியிட்ட தகவல் நாடாளுமன்றத்தில் புயலை கிளப்பியது. நாடு முழுவதும் இந்த விவகாரம் தற்போது சூடுபிடித்துள்ளது. இந்த ஆவணத்தை இந்து நாளேட்டின் முன்னாள் ஆசிரியர் என்.ராம் வெளியிட்டார்.
ரஃபேல் விமானம் வாங்குவது தொடர்பான ஒப்பந்த பேச்சுவார்த்தையில் பாதுகாப்புத் துறை அமைச்சகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் குழு ஈடுபட்டிருக்கும்போதே, பிரதமர் அலுவலகம் சார்பில் தனியாக ஓர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். பாதுகாப்புத் துறையின் அப்போதைய செயலாளர் மோகன் குமார், அப்போதைய துறை அமைச்சர் மனோகர் பாரிக்கருக்கு கைப்பட குறிப்பாக எழுதியதை வெளியிட்டது தி இந்து.
இது பெரும் புயலை கிளப்பியுள்ளது. இதனை வைத்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடியை குற்றம் சாட்டியுள்ளார். வழக்கத்துக்குமாறாக காலை 10.30 மணிக்கே செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, பிரதமர் மோடி முப்பதாயிரம் கோடி ரூபாயை திருடி அம்பானிக்குக் கொடுத்துவிட்டார். இது பாதுகாப்புத்துறை அமைச்சக ஆவணங்களில் இருந்து தெளிவாகத் தெரிகிறது என கடுமையாக சாடினார் ராகுல் காந்தி.
இந்த ரஃபேல் விவகாரம் இன்று மக்களவையில் பூகம்பத்தை கிளப்ப பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராம் இதற்கு விளக்கம் அளித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நிர்மலா சீதாராமன் பாதுகாப்புத் துறை அமைச்சரின் பதிலை அந்த பத்திரிகை ஏன் வெளியிடவில்லை? இதுதான் பத்திரிகை தர்மமா? ராகுலின் பேச்சு ஆபத்தானது என கூறினார்.
அப்போதைய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கரின் பதில் குறிப்பை ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் வெளியிட்டது. மேலும் நிர்மலா சீதாராமனின் குற்றச்சாட்டு குறித்து என்.ராமிடம் கேள்வி எழுப்பியது ஏ.என்.ஐ.செய்தி நிறுவனம். இதற்கு பதில் அளித்த என்.ராம், என்னுடைய செய்திக்கு துறைச்செயலாளரின் குறிப்புதான் தேவை. பாதுகாப்புத் துறை அமைச்சரின் பதில் குறிப்பை வெளியிடுவது பற்றி நான் தான் முடிவு செய்ய வேண்டும்.
இப்போது அந்த ஆவணத்தின் தொடர்ச்சியை வெளியிட்டு நான் வெளியிட்ட ஆவணம் அதிகாரபூர்வமான உண்மையான ஆவணம் என்பதை உறுதிப்படுத்திவிட்டார்கள். ரஃபேல் விவகாரத்தில் இந்திய அதிகாரபூர்வ குழுவைத் தாண்டி பிரதமர் அலுவலகம் பின்னால் இருந்து ஒரு இணை பேச்சுவார்த்தையைத்தான் நடத்தியிருக்கிறது.
நிர்மலா சீதாராமனிடம் இருந்து சான்றிதழ் எனக்குத் தேவையில்லை. நீங்கள் இப்போது பெரிய சிக்கலில் இருக்கிறீர்கள். எப்படியாவது அதை மூடிமறைக்கப் பார்க்கிறீர்கள். நான் நிர்மலாவுக்கு சொல்லும் அறிவுரை என்னவென்றால், ரஃபேல் விவகாரத்தின் போது நீங்கள் பாதுகாப்புத் துறை அமைச்சர் இல்லை. இதில் உங்களுக்குத் தொடர்பு இல்லை. எனவே தேவையில்லாமல் அன்று நடந்ததை நியாயப்படுத்தி சுமையை நீங்கள் ஏன் சுமக்கிறீர்கள்? என என்.ராம் கூறியுள்ளார்.









