இந்தியா
வேளாங்கண்ணியில்ஹெலிகாப்டர் சேவை இம்மாத இறுதியில் தொடக்கம். – சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க திட்டம்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உலகப் பிரசித்தி பெற்ற புனித ஆரோக்கிய அன்னை ஆலயம் நாகூர் ஆண்டவர் தர்கா சிக்கல் சிங்காரவேலர் கோயில் ஆகியவை சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளாகும். இங்குதான் கோடியக்கரை பறவைகள் சரணாலயமும் உள்ளது.
எனவே சுற்றுலாத் துறையை மேம்படுத்தி சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க அரசு பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாகவே இந்த மாவட்டத்தில் உள்ள கிறித்தவ விண்ணகரம் வேளாங்கண்ணி மாதா கோயிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக ஹெலிகாப்டர் சேலை தொடங்க திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.
இதற்காக வேளாங்கண்ணி ஆலயத்திற்கு சொந்தமான அருகிலுள்ள இடத்தில் ஹெலிகாப்டர் இறங்க வசதியாக ஹெலிபேட் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த ஹெலிகாப்டர் வேளாங்கண்ணியைச் சுற்றி சுமார் 25 கிலோ மீட்டர் வான் பரப்பளவில் பறக்கும். இதில் மொத்தம் 6 பயணிகள் ஒரே நேரத்தில் பயணிக்க முடியும்.
ஒரு பயணிக்கு ரூ.5000 கட்டணமாக வசூலிக்கப்பட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக பெங்களுருவிலிருந்து பிரத்யேக ஹெலிகாப்டர் இங்கு வர உள்ளது.
இந்த சேவை சென்னை திருச்சி விமான நிலையங்களுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளது. மேலும் இயற்கை பேரிடர் அவசர காலங்களிலும் ராணுவ ஹெலிகாப்டர்களும் வந்து இறங்கும் வகையில் இங்கு ஹெலிபேட் அமைக்கப்பட்டு வருகிறது.
இந்த சேவை குறித்து ஜெயம் ஏவியேஷன் என்ற நிறுவனம் நாகை மாவட்ட நிர்வாகத்தடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
ஏற்கனவே நாகப்பட்டினத்திலிருந்து இலங்கைக்கு கப்பல் இயக்கப்பட்டு வரும் நிலையில் ஹெலிகாப்டர் சேவையும் தொடங்கப்படுவது இந்த மாவட்டத்தின் சுற்றுலாத்துறை வளர்ச்சியில் மிகுற்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சேவை இம்மாத இறுதியில் தொடங்கப்பட உள்ளது என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.













