தமிழ்நாடு
பனங்காட்டுப் படை கட்சியில் இருந்து ஹரிநாடார் நீக்கம்: ராக்கெட் ராஜா அதிரடி!

நடிகை விஜயலட்சுமி தற்கொலை முயற்சி வழக்கில் சமீபத்தில் கைது செய்யப்பட்ட ஹரிநாடார் பனங்காட்டு படை கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக அந்த கட்சியின் தலைவர் ராக்கெட் ராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பனங்காட்டு படை கட்சி தலைவராக விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
திருநெல்வேலி மாவட்டம் மேல இலந்தைகுளத்தை சேர்ந்த அ.ஹரி நாடார் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதால், ஒழுங்கு நடவடிக்கை குழுவின் அறிவுறுத்தல் படி மாநில, மாவட்ட நிர்வாகிகளின் ஒப்புதலின்படி அவர் வகித்து வந்த ஒருங்கிணைப்பாளர் பொறுப்பில் இருந்தும் அடிப்படை உறுப்பினரில் இருந்தும் நீக்கப்படுகிறார்.
அதனால் ஹரி நாடாரின் கருத்திற்கோ, செயலுக்கோ இனி பனங்காட்டுப் படை கட்சி பொறுப்பேற்காது. பனங்காட்டுப் படை உறவுகள் இவரோடு இனி கட்சி அரசியல் செயல்பாடுகளில் தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டியதில்லை என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு பனங்காட்டுப் படை கட்சித் தலைவர் ராக்கெட் ராஜாவிடம் இருந்து அதிரடியான அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
முன்னதாக பெங்களூருவை சேர்ந்த ஒருவருக்கு கடன் வாங்கிக் கொடுப்பதாக பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் ஹரிநாடார் கைது செய்யப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது தமிழக போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.



















