தமிழ்நாடு
இன்றும் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்பு? அதிர்ச்சியில் தமிழக மக்கள்
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது என்பதும் நேற்று தமிழகத்தில் முழுவதும் 23 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பதும் தெரிந்ததே.
மேலும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை மற்றும் மருந்து பற்றாக்குறை இருப்பதால் நோயாளிகளுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் நேற்று செங்கல்பட்டு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக 13 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இதுகுறித்து விசாரணை நடந்து வருவதாகவும் தமிழக அரசின் சுகாதாரத் துறை தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் நேற்று செங்கல்பட்டில் பலியான 13 உயிர்களின் அதிர்ச்சியிலிருந்து இன்னும் தமிழகம் மீளாத நிலையில் இன்று திருப்பத்தூரில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக 4 பேர் உயிரிழந்ததாக வந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் 4 பேர் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இனிமேலும் மத்திய மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஒரு உயிர் கூட இழப்பு ஏற்படாமல் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.