தமிழ்நாடு
தமிழகத்தில் நிலநடுக்கமா? வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் உள்ள மயிலாடுதுறை பகுதியில் இன்று காலை திடீரென பெரும் சத்தம் ஏற்பட்டதால் அந்த பகுதியில் உள்ள மக்கள் பெரும் பரபரப்பு அடைந்தனர்.
மயிலாடுதுறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை பெரும் சத்தம் கேட்டதாகவும், இந்த சத்தம் வெடிச்சத்தம் போல் இருந்ததால் மக்கள் பீதி அடைந்ததாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
இன்று காலை 8.30 மணி அளவில் மயிலாடுதுறை சுற்றுவட்டார பகுதிகளில் ஏற்பட்ட பயங்கர சத்தம் காரணமாக பொதுமக்கள் அச்சத்தில் இருந்த நிலையில் வெடி விபத்து அல்லது விமான விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என பொதுமக்கள் மத்தியில் வதந்தி பரவியது.
இதனை அடுத்து அரசு இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளது. இந்திய ராணுவ விமான ஒத்திகையின் போது தாழ்வான பகுதிகளில் விமானம் பறக்கும் போது இவ்வாறு சத்தம் கேட்டதாகவும் மற்றபடி வெடிவிபத்து அல்லது விமானம் எதுவும் இல்லை என்றும் விளக்கம் அளிக்கப்பட்டது.
மேலும் ஒரு சிலர் மயிலாடுதுறை பகுதியில் பயங்கர சத்தத்துடன் அதிர்வு ஏற்பட்டதால் பூகம்பம் ஏற்பட்டு விட்டதாக அச்சத்தோடு தெரிவித்தனர். இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் விளக்கம் அளித்தபோது ’மயிலாடுதுறை உள்பட தமிழகத்தின் எந்த பகுதியிலும் நில அதிர்வு ஏற்படவில்லை என்றும் எனவே மக்கள் பீதி அடைய வேண்டாம் என்றும் இந்திய ராணுவ பயிற்சி விமானம் ஏர்லாக் கிளியர் செய்த போது இந்த சத்தம் ஏற்பட்டதாகவும் எனவே மக்கள் அச்சப்பட தேவையில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.


















