தமிழ்நாடு
முதல்வர்-டிஜிபி சந்திப்பில் என்ன நடந்தது? இனி அதிரடி ஆரம்பம் தானாம்!

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களை நேற்று புதிய டிஜிபியாக பதவி ஏற்ற சைலேந்திரபாபு சந்தித்தார். இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்று கூறப்பட்டாலும் 15 நிமிட சந்திப்பில் பல முக்கிய ஆலோசனைகள் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
குறிப்பாக போலீசார் மக்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதை உறுதியாக பின்பற்ற வேண்டும் என்று ஆலோசனை செய்தார்களாம். கடந்த ஆட்சியில் நடந்த சாத்தான்குளம் சம்பவம், இந்த ஆட்சியில் நடந்த சேலம் முருகேசன் சம்பவம் போல் இனியொரு சம்பவம் கூட நடக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும் என ஆலோசனை செய்யப்பட்டதாம்.
மேலும் கடந்த பத்து வருடங்களாக கட்டப்பஞ்சாயத்து செய்பவர்களின் தாக்கம் தமிழகம் முழுவதும் அதிகரித்துவிட்டதாகவும், அதை தடுக்க உரிய நடவடிக்கை எடுப்பது குறித்து முதல்வர் மற்றும் டிஜிபி ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது.
இதனை அடுத்து ஆன்லைன் குற்றங்கள் செய்யும் நபர்களை கூண்டோடு பிடிக்க வேண்டும் என்றும் எந்த வித ஆதாரமும் இல்லாமல் அவதூறுகள், முறைகேடுகள், பொய் பிரச்சாரம் செய்யும் போக்கு ஆன்லைனில் அதிகரித்து விட்டதாகவும் இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பேசியதாக தெரிகிறது.
அதுமட்டுமின்றி 10 வருடங்களில் அரசு நடவடிக்கை எடுக்காத சில முக்கிய புகார்களை தோண்டி எடுத்து விசாரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. எனவே அடுத்து வரும் நாட்களில் பல அதிரடி நடவடிக்கைகளில் டிஜிபி சைலேந்திரபாபு அவர்கள் ஈடுபடுவார் என்று கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


















