தமிழ்நாடு
முதல்வர் ஸ்டாலின் ரூ.200 கோடி லஞ்சம் வாங்கினார்… சிபிஐயில் புகார் அளிப்பேன்: அண்ணாமலை பகீர் குற்றச்சாட்டு!

திமுகவினரின் ஊழல் பட்டியலை இன்று வெளியிடுவேன் என கூறியிருந்த பாஜக தலைவர் அண்ணாமலை இன்று அதனை வெளியிட்டார். அதில் முதல்வர் ஸ்டாலின் 200 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாகவும் இது தொடர்பாக சிபிஐயில் புகார் அளிக்க உள்ளதாகவும் கூறிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் அண்ணாமலை.

#image_title
முதல்வர் ஸ்டாலின் குறித்து அண்ணாமலை கூறிய குற்றச்சாட்டு: 2006-2011 திமுக ஆட்சியில் தேர்தலுக்கு 6 மாதமே உள்ள நிலையில் சிறப்பு திட்டமாக சென்னையில் மெட்ரோ கட்ட அனுமதி வருகிறது. இந்த திட்டத்தின் மொத்த மதிப்பு 14,600 கோடி ரூபாய். இதற்கான டெண்டரில் விமல் என்ற இந்திய நிறுவனம், அல்ஸ்டாம் மற்றும் சி.ஏ.எஃப்.எம்.சி என்ற ஸ்பெயின் நிறுவனம் என மூன்று நிறுவனங்கள் பங்கேற்கிறது. டெண்டர் முடிய சில நாட்கள் இருக்கும் போது கஸ்டம் டியூட்டி சேர்க்க போகிறோம் என சொல்கிறார்கள். ஆனால் மத்திய அரசின் எக்சிம் பாலிசியின் படி எந்த காரணத்துக்காகவும் கஸ்டம்ஸ் டியூட்டி சேர்க்கக் கூடாது.
கஸ்டம் டியூட்டிக்கு முன்னர் இந்த டெண்டரில் சி.ஏ.எஃப்.எம்.சி நிறுவனம் 1,417 கோடி ரூபாய் மதிப்பில் தேர்வாகிறது. இரண்டாவது இடத்தில் அல்ஸ்டாம் நிறுவனம் 1,439 கோடியில் உள்ளது. இவர்கள் கஸ்டம்ஸ் டியூட்டி கொண்டு வந்த உடன் இரண்டாவது இடத்தில் இருந்த அல்ஸ்டாம் முதலிடத்துக்கு வந்து டெண்டரை பெறுகிறது. இந்த நிறுவனம் உலகம் முழுவதும் லஞ்சம் கொடுத்ததாக குற்றம்சாட்டப்பட்டு 722 மில்லியன் அமெரிக்க டாலர் அபராதம் விதிக்கப்பட்ட நிறுவனம்.

#image_title
இப்படி இருக்கையில் கஸ்டம் டியூட்டியை கொண்டு வந்து அல்ஸ்டாம் நிறுவனத்துக்கு டெண்டர் கொடுக்கப்படுகிறது. இதில் எங்களுடைய நேரடி குற்றச்சாட்டு என்னவென்றால், முதல்வர் ஸ்டாலினுக்கு 200 கோடி ரூபாய் அல்ஸ்டாம் நிறுவனத்தால் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதை சிங்கப்பூர் நிறுவனமான இண்டோ யூரோப்பியன் வெண்ட்சர் பிரைவேட் லிமிடெட் மூலம் கொடுத்துள்ளார்கள்.
2011 தேர்தல் செலவுக்காக 200 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்துக்கு மத்திய அரசு 15 சதவீதம் பங்களிப்பு செய்துள்ளது. எனவே சிபிஐ இயக்குநரிடம் முதல்வர் ஸ்டாலின் மீது புகார் அளிக்க உள்ளேன் என அண்ணாமலை கூறியுள்ளார்.