இந்தியா
தமிழகம் உள்பட 11 மாநிலங்களில் புதிய வகை டெங்கு: மத்திய அரசு எச்சரிக்கை!

தமிழகம் உள்பட 11 மாநிலங்களில் புதிய வகை டெங்கு வைரஸ் பரவி வருவதாக மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் சுகாதாரத்துறை அதை எதிர்த்து போராடி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இப்பொழுதுதான் கிட்டத்தட்ட பாதிக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் திடீரென டெங்கு காய்ச்சல் பரவி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அது மட்டுமின்றி தமிழகம் உள்பட 11 மாநிலங்களில் புதிய வகை டெங்கு காய்ச்சல் மிக வேகமாக பரவி வருவதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. செரோடைப் – 2 என்ற புதிய வகை டெங்கு காய்ச்சல் தமிழகம், கர்நாடகம், கேரளம், ஆந்திரா, தெலுங்கானா உள்பட 11 மாநிலங்களில் பரவி வருவதாகவும் இவ்வகை டெங்கு வைரஸ் பரவலை தொடக்கத்திலேயே தடுத்து நிறுத்த தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் அவர்கள் அனைத்து மாநிலங்களுக்கும் அறிவுறுத்தியுள்ளார்.
பொதுமக்களுக்கு தொலைபேசி அறிய ஆலோசனைகள் அளிப்பது, பரிசோதனை கருவிகளை அதிகரிப்பது ஆகியவைகளை மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த வகை வைரஸ் மிக வேகமாக பரவுவது உடன் அதிக அளவு உடல் நல பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றும் அதனால் தொடக்கத்திலேயே இதனை தடுத்து நிறுத்த வேண்டியது அவசியம் என்றும் சுகாதார செயலாளர் தெரிவித்துள்ளார். ஒரு பக்கம் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக அதிகரித்து வரும் நிலையில் இன்னொரு பக்கம் டெங்கு வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது நாடுமுழுவதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.














