ஆரோக்கியம்
அழகுக்காக முக எலும்பை உடைக்கும் “சுத்தியல் தட்டு“ முறை – வைரல் ஆகும் விபரீத முறை

அழகாக இருக்க வேண்டும் என்ற ஆசை ஆணுக்கும் சரி பெண்ணுக்கும் சரி சிறுவயதிலிருந்து பல் போகும் காலம் வரை எப்போதும் விட்டுப் போவதில்லை.
இந்த ஆசைக்கு தூபம் போட பல்வேறு அழகுசாதன பொருள்கள் சந்தைகளில் கிடைக்கின்றன. போதாதற்கு பியுட்டி பார்லர்களும் தெருவுக்கு தெரு பெருத்துப் போயிருக்கின்றன.
சமூக வலைத்தளங்களில் மூழ்கிப் போகும் நபர்களை கவர அதிலும் ஏராளமான அழகுக்குறிப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. இந்த அழகுக் குறிப்புகளில் சமீபத்திய புதுவரவு என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?
“எலும்பை உடைக்கும் சிகிச்சை“ (Bone Smashing) இதை “சுத்தியல் தட்டு சிகிச்சை“ என்றும் சொல்கிறார்கள். அதாவது கூர்மையான தாடை வேண்டும் என்றால், சுத்தியலால் முகத்தின் தாடை மற்றும் கன்ன எலும்புகளில் தட்ட வேண்டும். இதனால் கூர்மையான தாடை உருவாகி, முகம் அழகாகுமாம்.
சமூக வலைத்தளங்களில் பிரபலமாக இருக்கும் ஒரு இளைஞர் 20 வயது பிரணெ்டன் பீட்டர்ஸ். இவர் எலும்பை உடைக்கும் சிகிச்சையால் தனது முகதாடை எலும்பு கூர்மையாக மாறியதாக வெளியிட்ட வீடியோ வைரல் ஆனது. பலரும் அதேபோல் ஒரு சுத்தியல் வாங்கி முகத்தில் தட்ட ஆரம்பித்து அதை வீடியோவாகவும் வெளியிட்டு வருகின்றனர்.
மனித எலும்புகள் தங்களுக்கு வரும் அழுத்தம் மற்றும் சுமைக்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொள்ளும். குறிப்பாக, தங்களின் அமைப்பு, தடிமன் மற்றும் வலிமையை மாற்றிக் கொள்ளும். இதை 1892 ம் ஆண்டு ஜெர்மன் உடற்கூறு நிபுணர் ஜீலியஸ் வோல்ப் என்பவர் கண்டு பிடித்ததால் இதற்கு வோல்ஃப் விதி என்று பெயரிடப்பட்டது. இந்த விதியை தவறாக புரிந்து கொண்ட இக்கால இளைஞர் சமுதாயம் முகத்தில் சுத்தியலால் அடித்துக் கொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள்.
இதனால் எந்தவித பயனும் இல்லை. இயற்கையான அழுத்தங்களுக்கு மட்டுமே எலும்புகள் மாற்றம் நடக்கும். செயற்கையாக தட்டினால் தாடை எலும்புகள் பலவீனமடைந்து கடுமையான பாதிப்புகள் ஏற்படும். என்று எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்.
இந்திய மருத்துவக் கவுன்சில் இதை தடுக்க நடவடிக்கை எடுக்காமல் தூங்கிக் கொண்டிருக்கிறதா? என கேட்கிறார்கள் இதன் பயங்கரத்தை உணர்ந்தவர்கள்.




