செய்திகள்
ஹிஜாப்பை கழட்ட சொன்ன சம்பவம்..பாஜக பிரமுகர் சிறையில் அடைப்பு….
கர்நாடகாவில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் அணியக்கூடாது என பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்து சமீபத்தில் பல களோபரங்கள் வெடித்தது. இதைத்தொடர்ந்து தமிழகத்தில் பாஜக முகவர் அதை கையில் எடுத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. அப்போது, மதுரை மேலூர் நகராட்சி 8வது வார்டில் ஒரு இஸ்லாமிய பெண் வாக்களித்த வந்தார். அப்போது அவர் ஹிஜாப் அணிந்திருந்தார். எனவே, அவரின் ஹிஜாப்பை அகற்றும்படி அங்கிருந்த பாஜக முகவர் கிரிராஜன் வற்புறுத்தினார். ஆனால், அப்பெண் ஹிஜாப்பை கழட்ட மறுத்தார்.
இந்த விவகாரம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. மற்ற முகவர்களுக்கும் அவருக்கும் இடையே வாக்குவாதம் எழுந்தது. எனவே, அங்கிருந்த போலீசார் முகவர் கிரிராஜனை வெளியேற்றி விட்டனர். அதன் பின்னரே வாக்குப்பதிவு தொடர்ந்து நடைபெற்றது.
அந்த பாஜக முகவரின் செயலுக்கு கடும் கண்டனம் எழுந்தது. அவர் மீது அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், அவரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை மார்ச் 4ம் தேதி வரை சிறையில் அடைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.