தமிழ்நாடு
அழகிரியின் அடுத்த முயற்சி: மதுரை ஆட்சியருக்கு கடிதம்!

திமுகவில் தன்னை இணைத்துக்கொள்ளுமாறு வேண்டுகோள் வைத்துள்ள முன்னாள் மத்திய அமைச்சரும், கருணாநிதியின் மகனுமான மு.க.அழகிரி தனது அடுத்த முயற்சியாக மதுரை மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் கலைஞர் கருணாநிதிக்கு சிலை அமைக்க அனுமதி கேட்டுள்ளார்.
மு.க.அழகிரி தன்னை திமுகவில் சேர்த்துக்கொள்ள தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இதற்காக மு.க.ஸ்டாலினை தலைவராக ஏற்கவும் தயார் என கூறியிருந்தார். ஆனாலும் திமுக தரப்பில் இருந்து எந்த பதிலும் இல்லை. இதனையடுத்து செப்டம்பர் 5-ஆம் தேதி திட்டமிட்டபடி கலைஞர் சமாதியை நோக்கி தனது ஆதரவாளர்களுடன் அமைதிப்பேரணியை நடத்தி கவனத்தை ஈர்த்தார்.
இந்நிலையில் மதுரை பால்பண்ணை அருகே உள்ள சந்திப்பில் கலைஞர் கருணாநிதிக்கு வெண்கலை சிலை அமைக்க அனுமதி வேண்டி மதுரை ஆட்சியருக்கு அழகிரி கடிதம் எழுதியுள்ளார். அதில், தமிழக முதல்வராக 5 முறை பொறுப்பேற்றவரும், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் மேன்மைக்காக பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியவரும், திமுகவை பேரறிஞர் அண்ணாவிற்குப் பிறகு கட்டிக் காத்தவரும், பல்வேறு சோதனைகளைத் தாங்கி அண்ணாவின் இதயத்தை இரவலாக பெற்றவரும், 10 கோடி தமிழர்களின் அன்பைப் பெற்றவருமான கலைஞர் அவர்கள் இயற்கை எய்தியதை, உணர்வுள்ள உண்மைத் தொண்டர்களும், தமிழர்களும் தாங்கிக் கொள்ள முடியாமல் இன்றளவும் கண்ணீர் வடிக்கின்றனர்.
இத்தகு சிறப்பு மிக்க கலைஞர் அவர்களுக்கு, நான் 35 ஆண்டுகளாக வாழுகின்ற மதுரை மாநகரில் மதுரை பால்பண்ணை அருகே உள்ள சந்திப்பில், தலைவர் கலைஞர் அவர்களின் ‘வெண்கல சிலை’அமைக்க அனுமதி வழங்கி உதவிட மிகவும் வேண்டுகிறேன் என கூறியுள்ளார் அழகிரி.
















