சினிமா செய்திகள்
கங்கனா ரனாவத்தின் ‘தலைவி’: திரைப்பட விமர்சனம்

பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், அரவிந்தசாமி, சமுத்திரக்கனி உள்பட பலர் நடிப்பில் ஏஎல் விஜய் இயக்கத்தில், ஜீவி பிரகாஷ் இசையில் உருவாக்கிய ’தலைவி’ திரைப்படம் இன்று ரிலீஸ் ஆகி உள்ள நிலையில் இந்த படத்தின் விமர்சனத்தை தற்போது பார்ப்போம்.
பொதுவாக ஒரு அரசியல் தலைவரின் வாழ்க்கை வரலாற்றை படமாக்க வேண்டும் என்றால் அதில் எதை சொல்ல வேண்டும், எதை சொல்ல கூடாது, எதை பெரிதாக காட்ட வேண்டும், எதை மறைக்க வேண்டும் என்பதை சரியாக செய்ய வேண்டும். அதனை புரிந்து இயக்குனர் விஜய் இந்த படத்தை இயக்கி உள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.
எம்ஜிஆர் என்னும் மாபெரும் வசீகரமான தலைவர், அவரது கட்சிக்காக உழைக்க முன் வரும் ஜெயலலிதா, ஜெயலலிதாவுக்கு ஏற்பட்ட அவமானங்கள், அரசியலில் ஏற்பட்ட ஏற்ற இறக்கங்கள் ஆகியவைகளை மிக அழகாக இந்த படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் மிகப்பெரிய பிளஸ் என்று சொல்ல வேண்டுமானால் சரியான கேரக்டருக்கு சரியான நடிகர்களை தேர்வு செய்து தான். குறிப்பாக ஜெயலலிதா கேரக்டரில் கங்கனா ரனாவத் எப்படி பொருந்துவார் என்று படம் ஆரம்பிக்கும் போது கேள்வி கேட்டு அனைவரின் வாயை அடைத்து உள்ளார் ஏ.எல்.விஜய். அதேபோல் அச்சு அசலாக எம்ஜிஆர் ஆகவே மாறிவிட்ட அரவிந்தசாமி, சசிகலா கேரக்டருக்கு பூர்ணா, கருணாநிதி கேரக்டருக்கு நாசர், எம்ஆர் ராதா கேரக்டருக்கு ராதாரவி, ஆர் எம் வீரப்பன் கேரக்டருக்கு சமுத்திரகனி என சரியான நடிகர்களை தேர்வு செய்து பாதி வெற்றி பெற்றுவிட்டார் ஏ.எல்விஜய் என்று கூறலாம்.
மிகத் துணிச்சலான வசனங்கள், கொஞ்சம் கூட தொய்வில்லாத திரைக்கதை ஆகியவை இந்த படத்தின் மிகப்பெரிய பிளஸ். ஜெயலலிதா என்னும் இரும்பு மனுஷி எடுத்த துணிவான முடிவுகள், சந்தித்த அவமானங்கள், அவமானங்களை எதிர்கொண்ட விதம், தேர்தல் வெற்றிகள், தேர்தல் தோல்விகள் ஆகியவை மிக அழகாக இந்த படத்தில் காண்பிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வசனங்கள் குறைவாகவும் விஷுவல் காட்சிகள் அதிகமாகும் இருப்பது இயக்குனரின் திறமையை வெளிப்படுத்துகிறது.
படத்தின் ஆரம்பத்தில் ஜெயலலிதா சட்டசபையில் அவமானப்படும் காட்சிகளிலிருந்து ஆரம்பித்து, மீண்டும் இந்த சட்டசபைக்கு முதல்வராக தான் வருவேன் என சபதம் எடுப்பது, அந்த சபதத்தை அப்படியே கிளைமாக்ஸ் காட்சிகளில் இணைப்பது மிகச் சிறந்த திரைக்கதைக்கு எடுத்துக்காட்டு என்பது குறிப்பிடத்தக்கது.
எம்ஆர் ராதா துப்பாக்கி சூடு, இந்திரா காந்தியின் மறைவு, ராஜீவ் காந்தி குண்டு வெடிப்பு, எம்ஜிஆரின் மனைவி ஜானகி அம்மாள் முதல்வராக செய்யும் முயற்சி, ஆட்சி கவிழ்ப்பு, பாராளுமன்றத்தில் கம்பீரமாக ஆங்கிலத்தில் பேசும் திறமை, தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் செய்த தியாகங்கள் என ஜெயலலிதாவின் ஒவ்வொரு வாழ்க்கையின் அங்கங்களையும் மிகச்சரியாக பதிவு செய்துள்ளார் ஏ.எல்விஜய்.
அதேபோல் நடிகையாக இருக்கும் போது அம்மாவை இழந்த சோகம், திருமணத்திற்காக தவிக்கும் இளம் பெண்ணின் மனது, அதன்பின் எடுத்த அதிரடியான முடிவு, எம்ஜிஆருக்காக வாழ்க்கையைத் தியாகம் செய்தது என ஜெயலலிதா பக்கம் உள்ள அனைத்து பாசிட்டிவ் நிகழ்வுகளையும் ஒட்டுமொத்தமாக காட்ட முயற்சிக்கும் படம் தான் தலைவி.
மொத்தத்தில் ஒட்டுமொத்த திரைக்கதை, கேரக்டர் தேர்வு மற்றும் வசனங்கள், பாடல்கள் ஆகிய அனைத்துமே பிளஸ் பாயிண்டுகள் என்பது குறிப்பிடதக்கது. ஜிவி பிரகாஷின் பின்னணி இசை படத்திற்கு மேலும் வலு சேர்க்கிறது. மிகச்சரியான கிளைமாக்ஸ் இந்த படத்தில் இருப்பதால் படம் பார்த்துவிட்டு தியேட்டரை விட்டு வெளியே வரும்போது ஒரு மிகப்பெரிய மன திருப்தி ஏற்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. நிச்சயம் இந்த படத்திற்கு குறைந்தது மூன்று தேசிய விருதுகளாவது கிடைக்கும்.












