சினிமா செய்திகள்
அஜித் அரசியலில் ஈடுபடுகிறாரா? மேனேஜர் டுவிட்டரில் விளக்கம்!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் என்பவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் அஜித் விரைவில் அரசியலுக்கு வருவார் என்று கூறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் இதுகுறித்து அஜீத்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா தனது டுவிட்டரில் விளக்கமளித்துள்ளார்.
அஜித் நடித்த ’வலிமை’ திரைப்படம் பிப்ரவரி 24ஆம் தேதி வெளியானது. அந்த நாள் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் என்பதால் திட்டமிட்டு அந்த தினத்தில் வலிமை திரைப்படத்தின் ரிலீஸ் செய்வதாக வதந்திகள் பரவியது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் என்பவர் தனது சமூக வலைத்தளத்தில் ஜெயலலிதாவை அஜித் தலைவராக ஏற்றுக் கொண்டவர் என்றும் அதனால் விரைவில் அவர் அரசியலுக்கு வருவார் என்றும் கூறியிருந்தார். அவருடைய இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்களும் அஜித் அரசியலுக்கு வருவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கூறினார். இதனை அடுத்து சமூக வலைதளங்களில் அஜித் எப்போது அரசியலுக்கு வருவார் என்ற கேள்வியை ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் எழுப்பி வந்தனர்.
இந்த நிலையில் இதற்கு அஜீத்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். அவர் இதுகுறித்து கூறியதாவது: அஜித்குமாருக்கு அரசியலில் ஈடுபடும் எண்ணம் எதுவுமில்லை. எனவே அவர் அரசியலுக்கு வரப்போகிறார் என்ற தவறான தகவல்களை தயவுசெய்து ஊடகங்களில் பதிவு செய்வதை தவிர்க்குமாறு ஊடகவியலாளர்கள் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார்.
இதனை அடுத்து அரசியலுக்கு வரப்போவதில்லை என்பது உறுதி செய்யப்பட்டு உள்ளதாக கருதப்படுகிறது.

















