சினிமா
சல்மான்கான் செய்தது அருவருக்கத்தக்கது: முன்னாள் கிரிக்கெட் வீரரின் பகிரங்க குற்றச்சாட்டு!
நடிகர் சல்மான்கான் செய்துள்ள இந்த செயல் அருவருக்கத்தக்கதாக உள்ளதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
தமிழில் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான ‘வீரம்’ திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்றது. இதனை அடுத்து இந்தியில் இந்த திரைப்படம் ரீமேக் ஆகி இருக்கிறது. இதில் நடிகர் சல்மான்கான் நடித்துள்ளார். ‘கிஸ்ஸி கி பாய் கிஸ்ஸி கி ஜான்’ என இந்த படத்திற்கு தலைப்பிடப் பட்டுள்ளது. இந்த படத்தில் இருந்து சமீபத்தில் ‘எண்டம்மா’ பாடல் வெளியாகியது. இதில் சல்மான்கான் உட்பட அந்த பாடலில் நடனமாடியுள்ள அனைத்து நடன கலைஞர்களும் தென்னிந்திய பாரம்பரிய உடையான வேட்டி அணிந்து ஆடியிருந்தனர். இதில் பாரம்பரிய உடையான வேஷ்டியை சல்மான்கான் இழிவுபடுத்துவதாக நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
இதற்கு வலுசேர்க்கும் விதமாக ட்விட் செய்து இருக்கிறார் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் லஷ்மண் சிவராமகிருஷ்ணன். அவர் தெரிவித்திருப்பதாவது, “இது நமது தென்னிந்திய கலாச்சாரத்தை மிகவும் கேலி செய்கிறது மற்றும் இழிவுபடுத்துகிறது. அது லுங்கி அல்ல, வேட்டி . நமது கலாச்சார உடையானது அருவருப்பான முறையில் காட்டப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார். நெட்டிசன்கள் பலரும் இவரது கருத்தை ஆமோதித்து கமெண்ட், ரீட்வீட் செய்து வருகின்றனர்.