தமிழ்நாடு
நடிகர் அஜித்தின் தந்தை மரணம்: முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் ஈபிஎஸ் இரங்கல்!

பிரபல நடிகர் அஜித் குமாரின் தந்தை சுப்ரமணியன் இன்று அதிகாலை 4:30 மணியளவில் உடல்நலக்குறைவால் காலமானார். 85 வயதான அவர் கடந்த 4 ஆண்டுகளாக பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு படுக்கையில் இருந்து வந்தார். இன்று அதிகாலை உயிரிழந்த அவரது உடல் சென்னை பெசன்ட் நகர் மயானத்தில் தகனம் செய்யப்பட உள்ளது.

#image_title
இந்நிலையில் நடிகர் அஜித்தின் தந்தை மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், நடிகர் அஜித்குமார் அவர்களின் தந்தை சுப்பிரமணியம் அவர்கள் உடல்நலக்குறைவால் மறைந்த செய்தி கேட்டு வருந்தினேன். தந்தையின் பிரிவால் வாடும் அஜித்குமார் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
அதேப்போல் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், தன்னைத்தானே தகவமைத்து கொண்ட தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர், அன்புச்சகோதரர் அஜித்குமார் அவர்களின் தந்தை பி.சுப்ரமணியம் மறைந்தார் என்ற செய்தியறிந்து மிகுந்த வருத்தமுற்றேன். தந்தையை இழந்து வாடும் அஜித்குமார் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் என் ஆழ்ந்த இரங்கல்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.