தமிழ்நாடு
ஆடு திருடும் கும்பலால் பணியை ராஜினாமா செய்த சப்-இன்ஸ்பெக்டர்

ஆடு திருடும் கும்பலால் ஒரு சப்-இன்ஸ்பெக்டர் தனது பதவியை மன உளைச்சலால் ராஜினாமா செய்வதாக தெரிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சப் இன்ஸ்பெக்டராக இருந்த கங்கை நாத பாண்டியன் என்பவர் ஆடு திருடும் கும்பலை சேர்ந்தவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் வைக்காமல் இருப்பதற்காக லஞ்சம் கேட்டதாக சில ஆடியோக்கள் இணையதளங்களில் வைரலானது.
இந்த ஆடியோ திட்டமிட்டு அவதூறு பரப்ப வேண்டும் என்பதற்காகவே எடிட் செய்யப்பட்ட ஆடியோ என்றும், ஆடு திருடும் குற்றவாளிகள் தாங்கள் தப்பிப்பதற்காக ஏற்பாடு செய்த ஆடியோ என்றும் சப்-இன்ஸ்பெக்டர் ககங்கை நாத பாண்டியன் தெரிவித்திருந்தார் .
ஆனால் இந்த ஆடியோ விவகாரம் மிகப்பெரிய அளவில் இணையதளங்களில் வைரலானதால், கங்கை நாத பாண்டியன் ஆயுதப்படைக்கு திடீரென பதவி மாற்றம் செய்யப்பட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த கங்கை நாத பாண்டியன் நெல்லை சரக டிஐஜி தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:
நெல்லை, சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி என பல்வேறு மாவட்டங்களில் உதவி ஆய்வாளராக சிறப்பாக பணியாற்றி வந்துள்ளதாகவும், தன்னுடைய பெயருக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் சிலர் ஆடியோ வெளியிட்டுள்ளனர்.
தன்னிடம் விசாரணை நடத்தாமல் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டேன். தனக்கு மனவளர்ச்சிக்குன்றிய ஒரு பெண் இருக்கிறார். இது ஒருபுறம் இருக்க தற்பொழுது பணியிலும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் சிலர் தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். மன உளைச்சலுடன் இருப்பதால் தொடர்ந்து பணியாற்ற முடியாது என்பதால் தனது பதவியை ராஜினாமா செய்கிறேன். இவ்வாறு அவர் தனது ராஜினாமா கடிதத்தில் தெரிவித்துள்ளார்.


















