சினிமா செய்திகள்
கோடிக்கணக்கில் பணம் கேட்டு மிரட்டிய ஃபைனான்சியர்கள்: நடிகர் விமல் போலீசில் புகார்

நடிகர் விமலிடம் 3 பைனான்சியர்கள் கோடிக்கணக்கில் பணம் கேட்டு மிரட்டியதால் அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள நிலையில் மூன்று பைனான்சியர்கள் மீது தற்போது வழக்கு பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விமல், ஆனந்தி நடிப்பில் பூபதி பாண்டியன் என்பவர் இயக்கத்தில் உருவான திரைப்படம் ’மன்னார் வகையறா’. கடந்த 2018ஆம் ஆண்டு இந்த படம் வெளியானது என்பதும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் ’மன்னார் வகையறா’ திரைப்படத்தின் லாபத்தை மறைத்து தன்னிடம் நஷ்டக் கணக்கை காண்பித்து தன்னிடம் நஷ்ட ஈடு கேட்டு துன்புறுத்தியதாக பைனான்சியர்கள் 3 பேர் மீது நடிகர் விமல் போலீசில் புகார் அளித்துள்ளார். மன்னார் வகையறா படத்துக்கு பைனான்ஸ் செய்த சிங்காரவேலன், மூர்த்தி மற்றும் விக்னேஷ் ஆகிய மூன்று பேர் தன்னிடம் நஷ்ட ஈடு கேட்டு தொல்லை தருவதாகவும் விமல் அந்த புகாரில் கூறியுள்ளார்.
உண்மையில் மன்னார் வகையறா திரைப்படம் சாட்டிலைட் உரிமை, வெளிநாட்டு உரிமை, தியேட்டரிக்கல் உரிமை ஆகியவை சேர்ந்து மொத்தம் 8 கோடி ரூபாய் வசூல் செய்ததாகவும் அந்த படம் நல்ல லாபத்தை பெற்றுத் தந்ததாகவும் அவர் அந்த மனுவில் கூறியுள்ளார்.
ஆனாலும் லாபக்கணக்கை மறைத்துவிட்டு தன்னிடம் கோடிக்கணக்கில் பணம் கேட்டு மிரட்டி வருவதாகவும், தனக்கு ரூபாய் 2 கோடி வரை இழப்பு ஏற்பட்டதாகவும் அந்த புகாரில் நடிகர் விமல் கூறியுள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் பைனான்சியர்கள் 3 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.


















