வணிகம்
DA vs DR விவகாரம்: ஓய்வூதியதாரர்களுக்கு உச்சநீதிமன்றம் முக்கிய தீர்ப்பு – சமத்துவம் கட்டாயம்!

அகவிலைப்படி (DA) மற்றும் அகவிலை நிவாரணம் (DR) தொடர்பான முக்கிய வழக்கில், ஓய்வூதியதாரர்களுக்கு ஆதரவாக உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. பணியில் இருக்கும் அரசு ஊழியர்களுக்கு அதிக DA வழங்கி, ஓய்வூதியதாரர்களுக்கு குறைந்த DR வழங்குவது சமத்துவ உரிமைக்கு எதிரானது என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
இந்த வழக்கில், கேரள அரசு மற்றும் கேரள மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை நீதிபதிகள் மனோஜ் மிஸ்ரா மற்றும் பிரசன்னா பி. வரலே அடங்கிய அமர்வு தள்ளுபடி செய்தது. இதன் மூலம், DA மற்றும் DR விகிதங்களில் வேறுபாடு காட்டுவது அரசியலமைப்பின் 14வது பிரிவான ‘சமத்துவ உரிமை’யை மீறுவதாக கேரள உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.
நீதிமன்றம் கூறியதாவது, DA மற்றும் DR இரண்டுமே பணவீக்கத்தின் தாக்கத்தை சமநிலைப்படுத்துவதற்காக வழங்கப்படுகின்றன. அதனால், இந்த இரண்டிற்கும் இடையே விகிதங்களில் வேறுபாடு காட்டுவது தன்னிச்சையான செயலாகும்.
இந்த சர்ச்சை 2021ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஒரு அரசாணையால் உருவானது. அதன்படி, பணியில் இருக்கும் ஊழியர்களுக்கு 14% DA உயர்வு வழங்கப்பட்டபோது, ஓய்வூதியதாரர்களுக்கு 11% மட்டுமே DR உயர்வு வழங்கப்பட்டது. இதை முதலில் ஒருநீதிபதி அமர்வு ஏற்றுக்கொண்டிருந்தாலும், பின்னர் இருநீதிபதி அமர்வு இந்த வேறுபாட்டை தவறானது எனக் கூறி ரத்து செய்தது.
மாநில அரசு நிதி நெருக்கடியை காரணமாகக் காட்டினாலும், அந்த வாதத்தை உச்சநீதிமன்றம் ஏற்கவில்லை. நிதி சிக்கல்கள் சலுகைகளை தாமதப்படுத்தக் காரணமாக இருக்கலாம்; ஆனால், வழங்கப்படும் சலுகைகளில் பாகுபாடு இருக்கக்கூடாது என்று நீதிமன்றம் வலியுறுத்தியது.
மேலும், பணவீக்கத்தின் தாக்கம் ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் ஒரே மாதிரியாக இருப்பதால், அவர்களுக்கு வழங்கப்படும் DA மற்றும் DR விகிதங்களும் சமமாக இருக்க வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தற்போது மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் சுமார் 58% அளவில் DA மற்றும் DR பெற்று வருகின்றனர். இது விரைவில் 60% ஆக உயர வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.












