Uncategorized
இறந்து போன நபர்களுக்கு வரும் தபால் மற்றும் பார்சல்களை வாரிசுகளிடம் வழங்கும் வகையில் விதிகளில் திருத்தம் தேவை. தபால்துறைக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

சென்யை உயர்நீதிமன்றத்தில் நீலாங்கரையைச் சேர்ந்த மோகனா ராமசாமி தாக்கல் செய்துள்ள மனுவில் எனது கணவர் இறந்து விட்டார். அவரது பெயருக்கு இதுவரை தபால்களும் பார்சல்களும் வருகின்றன. அந்த தபால் மற்றும் பார்சல்களை தபால் துறையினர் எங்களிடம் தராமல் திரும்ப கொண்டு செல்கிறார்கள். எனவே, எனது கணவர் பெயருக்கு வரும் தபால்களை அவரது சட்ட முறைப்படியான வாரிசான என்னிடம் தருமாறு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி அருள்முருகன் ஆகியார் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்திய தபால் அலுவலக சட்டம் பிரிவு 51ல் இறந்து போனவர்களின் முகவரிக்கு வரும் தபால்களை யாரும் கோராத ஆவணமாகவே கருதப் படுகிறது. இதனால் இறந்து போனவர்களின் முகவரிக்கு வரும் கடிதங்கள் பார்சல்களை அனுப்பிய இடத்திற்கே திரும்ப அனுப்பப்படுகிறது. அனுப்பியவர்கள் முகவரியில் இல்லை என்றால் சம்பந்தப்பட்ட தபால் அலுவலகததிலேயே வைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
தபால் சட்டம் பிரிவு 65 துணை விதி 1ல் தபாலை அனுப்பியவர் இல்லை என்றால் அந்த தபால் அழிக்கப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த குழப்பமான பிரிவுகளால் மனுதாரரைப் போல் பலர் பாதிக்கப்படுகிறார்கள். எனவே இந்த பிரிவுகளில் திருத்தம் கொண்டுவரப்பட்டு இறந்து போனவருக்கு வரும் தபால்கள், பார்சல்களை அவர்களின் வாரிசுகளுக்கு தருமாறு மாற்றம் செய்ய வேண்டும்.
இது தொடர்பான விதிகளில் திருத்தம் கொண்டு வரும் வகையில் இந்த உத்தரவு நகலை தபால் துறையின் தலைமை இயக்குநருக்கு கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் அனுப்பி வைக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.









